முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா.. விரைவில் நலம்பெற மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர்
நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது.
'கவலைப்படாதீங்க.. முதல் அலையைவிட 2ஆம் அலை ஆபத்தானது இல்ல, ஆனால்' ஐசிஎம்ஆர் தலைவரின் அதிமுக்கிய தகவல்
மன்மோகன் சிங்கிற்கு கொரோனா
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை எய்மஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மோடி ட்வீட்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டு வரவேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
Array
அதேபோல ராகுல் காந்தி தனது ட்விட்டரில், "டியர் மன்மோகன் சிங் ஜி, விரைவில் நலம் பெறுங்கள். இந்த இக்கட்டான காலத்தில் நாட்டிற்கு உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை தேவை" எனப் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "மன்மோகன் சிங் விரைவில் குணம் பெற வேண்டும் என அவரது குடும்பத்தினருடன் நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் தனது முழு வலிமையுடனும் எதிர்த்துப் போராடி விரைவில் குணமடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தலைவர்கள் ட்வீட்
இதேபோல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பல தலைவர்களும் அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என ட்வீட் செய்துள்ளனர். முன்னதாக, நாட்டில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், பயன்பாடு, அனுமி உள்ளிட்டவற்றில் எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு நேற்று மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.