4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை இப்படியா செய்வாங்க! விஷம் குடித்து உயிரிழந்த பெற்றோர்.. ஷாக் சம்பவம்
டெல்லி: பெற்றோர் தற்கொலையால் உயிரிழந்த நிலையில், பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அங்கே உடல்களுடன் இருந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக அமைந்துள்ளது.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, மக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மன அழுத்தம் என்பதை நாம் சாதாரணமாக நினைத்துக் கொள்ள முடியாது.
மற்ற நோய்களின் தீவிரம் கூட நம்மால் உணர முடியும். இருப்பினும், உளவியல் ரீதியான மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் சமூகத்தில் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது கடினம்.
பகீர் சம்பவம்: மன அழுத்தம் அதிகரிக்கவே சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் மோசமான முடிவுகளையும் கூட எடுக்கிறார்கள். அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. உத்தரகண்ட்டின் டேராடூனின் கிளமென்ட் டவுன் பகுதியில் தம்பதியினரின் உடல் அவர்களது வீட்டிற்குள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் துயரம் என்னவென்றால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையும் அங்கே இருந்துள்ளது. அங்குக் குழந்தையைக் கண்டறிந்த போலீசார், உடனடியாக குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு செக்அப்பிற்காக அனுப்பி வைத்தனர். பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை, அங்கே பெற்றோரின் உடலுக்கு அருகிலேயே இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனில் கிளமென்ட் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டின் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். உள்ளே கண்ட காட்சி போலீசாரை சற்று உலுக்கிவிட்டது. அங்கே பெற்றோர் உடல்களுக்கு அருகிலேயே பச்சிளம் குழந்தை இருந்துள்ளது.
பச்சிளம் குழந்தை: இது குறித்து போலீசார் கூறுகையில், "நாங்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே இருவரது உடல்கள் இருந்தன. முதற்கட்ட விசாரணையில் அது அங்கு வசித்த 25 வயது கணவர் மற்றும் அவரது 22 வயது மனைவியின் உடல்களை என்பதைக் கண்டறிந்தோம். மேலும், அங்கே பிறந்து வெறும் 4 நாட்களே ஆன குழந்தையையும் அங்கே இருந்தது. குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
அவர்கள் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியிருக்கும். உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். முடிவுகள் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. இப்போது வரை குழந்தையின் உடல்நிலை சீராகவே இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்" என்றார்.
போலீஸ் விசாரணை: இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அதில் உயிரிழந்த அந்த பெண் அவரது இரண்டாவது மனைவி என்பது தெரிய வந்தது. இரண்டாவது மனைவி காரணமாக அந்த நபரின் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருந்து யாரும் இவர்களுடன் தொடர்பில் இல்லையாம். இந்தச் சூழலில் இரண்டாவது மனைவி கருவுற்ற நிலையில், அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இந்தத் தம்பதி கடந்த சில மாதங்களாகவே அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் அக்கம்பக்கத்தினர் குறிப்பிட்டனர். அவர்கள் தற்கொலையால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே போலீசார் இது குறித்து மேலும் கூறுகையில், "அவர்களின் உடலில் காயத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இருப்பினும், துல்லியமாக என்ன நடந்தது என தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.













Click it and Unblock the Notifications