12 எம்பிக்கள் சஸ்பெண்ட் அமளி.. ஓமிக்ரான் பரவல் பற்றி விளக்கம் -நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
டெல்லி: நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதம் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டதால் அவையில் பெரிய அமளி ஏற்பட்டது. நேற்று அமளிக்கு இடையே அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் காலை 11 மணிக்கு அவை கூடியது.
கேள்வி நேரத்தில் இன்று முக்கிய துறைகளுக்கு கீழ் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் குழந்தை பிறப்பு தொழில்நுட்பம், பாதுகாப்பு, மருத்துவ நடவடிக்கைகள் தொடர்பான மசோதா ஒன்றை இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவை தொடங்கியதில் இருந்து வேளாண் சட்டம் நீக்கம் தொடர்பாக விவாதம் வேண்டியும், 12 எம்.பிக்கள் ராஜ்ய சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பற்றி விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்?
12 எம்பிக்கள் நீக்கம்
ராஜ்ய சபாவில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது. எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக நசுக்குகிறது என்று காங்கிரஸ், திரிணாமுல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரண்டு அவையிலும் குரல் எழுப்பியது. எம்பிக்களை சஸ்பென்ட் செய்ய சபாநாயகருக்கு அனுமதி உண்டு. அவரின் முடிவை கேள்வி கேட்க முடியாது. 12 பேரும் மன்னிப்பு கேட்டால் மீண்டும் அவையில் சேர்க்கலாம் என்று மாநிலங்களவை சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவையில் விளக்கம் அளித்தார்.
கூட்டம்
ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் யாரும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இதையடுத்து அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். ராஜ்யசபாவில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
கோரிக்கை விவசாயம்
இந்த கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஆர்ஜேடி, முஸ்லிம் லீக், மதிமுக, லோக் ஜனதா தள், தேசிய மாநாட்டு கட்சி, ஆர்.எஸ்.பி, ஆம் ஆத்மி, விசிக, டி.ஆர்.எஸ். பங்கேற்றன. இதன்பின் மீண்டும் கூடிய அவையில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவாதிக்க ராஜ்யசபாவில் தீபெந்தர் சிங் ஹூடா நோட்டீஸ் விடுத்தார். அதேபோல் விவசாய சட்டம் நீக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு நோட்டீஸ்
லக்கிம்பூர் படுகொலை குறித்து விசாரிக்க லோக்சபா சிபிஎம் எம்.பி. ஆரிப் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் விடுத்தார். தெலுங்கானா விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாக இதில் தெலுங்கானா எம்பிக்கள் சிலர் பேசினர். இதனால் அவையில் சில நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதன்பின் தமிழக வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும். தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான மழையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் விடுத்தார்.
க்ரிப்டோகரன்சி
ஆனால் இதன் மீதான விவாதங்கள் நடக்கும் முன் மீண்டும் எம்பிக்கள் அமளியில் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் கிரிப்டோகரன்சி மசோதா குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா கூட்டத்தில் பேசினார். அதில் தற்போது இணையத்தில் பரவும் கிரிப்டோகரன்சி மசோதா பழையது. புதிய மசோதா விரைவில் தாக்கல் செய்யபப்டும். கிரிப்டோகரன்சியின் ஆபத்துகளை மக்கள் உணர வேண்டும். அது தவறான கைகளுக்குச் செல்வது குறித்துக் கண்காணிப்புச் செய்து வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா கூட்டத்தில் பேசினார்.
கொரோனா
அதன்பின் ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் மாண்டவியா, இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார். இதுவரை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. மாநில அரசுகளிடம் பாசிட்டிவ் சாம்பிள்களை ஜீன் சோதனைக்கு அனுப்பும்படி கூறி இருக்கிறோம்.விமான நிலையங்களில் தீவிர சோதனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளான் என்று குறிப்பிட்டார். இதன் பின் மீண்டும் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து விவாதம் எழுந்த நிலையில் அமளியால் நாள் முழுக்க இரண்டு அவையும் ஒத்திவைக்கப்பட்டது.