Gandhi Statue Theft: மகாத்மா காந்தி சிலையை திருடிய மர்ம நபர்கள்.. ஆஸ்திரேலியாவில் ஷாக்.. இந்தியா கடும் கண்டனம்
டெல்லி: ஆஸ்திரேலியாவின் மெல்போனில் மகாத்மா காந்தியின் (Gandhi Statue Theft) வெண்கல சிலையை மர்ம நபர்கள் இரவோடு இரவாக தூக்கி சென்ற சம்பவம் நடந்து உள்ளது. இந்திய சமூகத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விக்டோரியா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவத்திற்கு உறுதியான எதிர்ப்பினையும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவ்விலே என்ற நகரில் இந்திய சமூகத்தினருக்கான மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்திற்கு வெளியே மகாத்மா காந்தியின் சிலை உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை திருட்டு
இருநாடுகளுக்கு இடையேயான நட்புணர்வு மற்றும் ஆழமான கலாசார உறவுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்திய - ஆஸ்திரேலிய சமூகத்தினர் மையத்திற்கு வெளியே இந்த சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் அதை தூக்கியும் சென்றுள்ளனர்.
இது அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்துள்ளது. காந்தி சிலையை தூக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைசகம் வலியுறுத்தியுள்ளது.
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது மற்றும் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் இந்திய அரசு உறுதியுடன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
சிலையை உடனடியாக மீட்கவும், சம்பந்தப்பட்டவர்களை கடுமையாகத் தண்டிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆழமான பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த சிலை, டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) மூலம் வழங்கப்பட்டதாகும்.
திங்கட்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு
காந்தி சிலையை சேதப்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர மரியாதையின் உத்வேகத்திற்கு எதிரானதாக உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- திங்கள் கிழமை இரவு 12.50 மணியளவில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை
426 கிலோ எடை கொண்ட இந்த சிலை பீடத்தில் உறுதியாக நிறுவப்பட்டு இருந்தது. விக்டோரியா மாகாண போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications