கழற்றிவிட்ட கனடா.. கப்புனு கைகொடுத்த ஜெர்மனி! குட் நியூஸால் இந்தியா ஹாப்பி!
டெல்லி: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கனடாவில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இது இந்தியர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பேசப்பட்டு வரும் நிலையில், திறமையான இந்தியர்களுக்கான விசாவை ஜெர்மனி 90,000 ஆக உயர்த்தியுள்ளது.
வடஅமெரிக்க நாடான கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கிறது. ஆனால், பொருளாதாரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் அளவுக்கு அந்நாட்டில் மக்கள் தொகை போதுமானதாக இல்லை. வெறும் 4 கோடி பேர்தான் கனடாவில் இருக்கின்றனர். அந்நாட்டை பராமரிக்க இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். தவிர, இந்த எண்ணிக்கையில் 19.3% பேர் இந்தியா, சீனா என ஆசிய நாட்டை சேர்ந்தவர் ஆவார்கள்.

என்னதான் நம்முடைய ஆட்கள் கனடாவுக்கு உழைத்து கொடுத்தாலும், கடைசியில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து, அந்நாட்டு அரசு இந்தியர்களுக்கு முதுகில் குத்தியுள்ளது. அதாவது வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தை குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்துதான் அதிகமானோர் கனடாவுக்கு குடிபெயர்கின்றனர். இதை கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு 4,85,000ஆக இருக்கும் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 3,95,000ஆக குறைக்கவும், 2026ல் 3,80,000 ஆக குறைக்கவும், 2027ம் ஆண்டு 3,65,000 ஆக குறைக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து நேஷ்னல் போஸ்ட் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக இப்படியாக கனடா காய் நகர்த்தியுள்ள நிலையில், இந்தியாவுக்கு ஜெர்மனி நட்புக்கரம் நீட்டியுள்ளது. ஜெர்மன் வர்த்தகம் 2024 இன் 18வது ஆசிய-பசிபிக் மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திறமையான இந்தியர்களுக்கான விசாவை ஜெர்மனி 90,000 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான உறவு ஒவ்வொரு அடியிலும் முன்னோக்கி நகர்ந்து ஆழம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இரு நாட்டு தலைவர்கள் எதிர்காலம் குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். மறுபுறம், எங்கள் நாடுகளின் போர்க்கப்பல்கள் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இரு நாடுகளின் நட்பு 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இனி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இந்த உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ந்த இந்தியாவுக்கான வரைபடத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இரு பெரும் ஜனநாயக நாடுகள் எதிர்காலத்தில் உலக நன்மைக்காக எவ்வாறு இணைந்து பயணிக்க முடியும் என்பதை விளக்கும் வகையில் 'ஃபோகஸ் ஆன் இந்தியா' எனும் ஆவணத்தை ஜெர்மன் அமைச்சரவை வெளியிட்டதை நான் வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "தற்போதுவரை திறமை வாய்ந்த இந்தியர்களுக்கு ஆண்டுக்கு 20,000 விசாக்களை ஜெர்மனி வழங்கி வந்தது. இனி இந்த விசாக்களின் எண்ணிக்கையை 90,000ஆக உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஜெர்மன் வளர்ச்சியை வேகப்படுத்தும்" என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில், கனடா எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாக ஜெர்மன் இந்தியாவுடன் கைகோர்த்திருப்பது, பிரிவினைவாதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications