குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையா.. இனி மரணதண்டனை உறுதி.. அரசு ஒப்புதல்
டெல்லி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளும் இதற்கு தப்பவில்லை. இந்த நிலையில் சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை புரியும் கொடூரர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் வளர்ந்துவிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதே வேளையில் ஆண் குழந்தைகளும் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பாலியல் கொடூரங்கள்
அதிலும் இந்த குழந்தைகளின் நெருங்கிய உறவினர்களில் சிலர் கூட இப்படிப்பட்ட பாதக செயல்களை செய்யத் தயங்குவதில்லை எனபது கொடூரத்தின் உச்சம். இப்படி குழந்தைகள் பாலியல் கொடூரங்களால் பாதிக்கப்பட்டாலும் அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்கும் ஒரு சட்டம் கூட 2012க்கு முன்பு வரை இந்தியாவில் இல்லை.
தண்டனை இருமடங்கு அதிகரிப்பு
குழந்தைகள் மீது பரவலாக நடத்தப்படுகிற பாலியல் வன்முறையின் எந்த வடிவமும் சட்டத்துக்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும் வழக்கைப் பதிவு செய்ய மறுக்கும் போலீஸாருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. இதுவே, இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்துக்கான முதல் விரிவான சட்டமாகும். 2012-2016 வரையில் புகார் அளிக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.
சட்டதிருத்தத்துக்கு ஒப்புதல்
இந்த குற்றங்களை குறைக்கும் நோக்கிலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் நோக்கிலும் போக்சோ சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மோசோதாவில் சில கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட்ட ஒப்புதல் கோரியிருந்த நிலையில் தற்போது போக்சோ சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்ற முடியும்.
கடும் தண்டனை
அதோடு திருத்தப்பட்ட இந்த மசோதா மூலமாக குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என குழந்தைகளுக்கு எதிரான எந்த செயல்களில் ஈடுபட்டாலும் அதிகப்படியான தண்டனை விதிக்க முடியும். போக்ஸோ சட்டம் 2012 பிரிவு 2,4, 5,6,9,14,15,34,42,45 இந்த பிரிவுகளின் கீழ்தான் தற்போது சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரணதண்டனை உறுதி.