சபரிமலை.. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான மாறுபட்ட கருத்தை அரசு படிக்க வேண்டும்.. நாரிமன் அதிரடி
டெல்லி: சபரிமலை விவகாரம் தொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள மாறுபட்ட கருத்தை அரசு கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வில், இடம்பெற்றிருந்த ஆர்.எப்.நாரிமன், சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தாவிடம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட செல்லலாம் என்று கடந்த வருடம் செப்டம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சுமார் 65 பேர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

7 பேர் பெஞ்ச்
இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று அந்த அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால், இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகிய இருவரும் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

புனித நூல்
மேலும் நாரிமன் தனது தீர்ப்பில், அரசியல் சாசனம் தான் மக்களின், புனித நூல். குழுவாக சேர்ந்து கொண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த விடாமல் யாரும் செயல்படக்கூடாது என்று தடாலடியாக எச்சரிக்கை பிறப்பித்திருந்தார்.

அரிதான நிகழ்வு
இந்த நிலையில், இன்று, கேரள அமைச்சர்கள் சிலர் சபரிமலைக்கு வரக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசால் முடியாது என்று பேட்டிகள் அளித்து வருகின்றனர். இப்படியான நிலையில் இன்று மதியம் உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் மற்றொரு வழக்கு தொடர்பான விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தாவிடம் சில கருத்துகளை பதிவு செய்துள்ளார். வழக்கமாக இது போன்று, வேறு ஒரு வழக்கின்போது மற்றொரு வழக்கு தொடர்பாக நீதிபதிகள் பேசுவது இல்லை என்பதால், இது ஒரு அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

படித்து பார்க்க வேண்டும்
துஷ்கர் மேத்தாவிடம், நாரிமன் கூறுகையில், சபரிமலை தீர்ப்பில், மிகவும் முக்கியமாக, நீதிமன்றம் குறிப்பிடப்பட்ட மாற்றுக் கருத்தை, அரசு படித்து பார்க்க வேண்டும். இதை நீங்கள் அரசுக்கு தெரிவியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை ஜாமீனில் விடுதலை செய்ததற்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி இருந்தபோதுதான் துஷ்கர் மேத்தாவிடம், இவ்வாறு நாரிமன் தெரிவித்துள்ளார். மேலும் சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி நாரிமன், துஷ்கர் மேத்தாவிடம், அரசு என குறிப்பிட்டது மத்திய அரசை என தெரிகிறது.












Click it and Unblock the Notifications