மளமளவென சரியும்.. அத்தியாவசிய பொருட்களின் விலை! இன்று ஜிஎஸ்டி கூட்டம்! எடுக்கப்படும் முக்கிய முடிவு
டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த இருநாள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இதில், வரி விகிதங்களை மாற்றுதல், வரி இணக்க நடைமுறைகளை எளிதாக்குதல் உள்ளிட்ட இந்தியாவின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாட்டிற்கு எவ்வாறு பயனளித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். ஜிஎஸ்டியின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை அவர் அப்போது வலியுறுத்தினார். இது பொது மக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) நிவாரணம் அளிக்கும் என்றும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

ஜிஎஸ்டி வரியில் மாற்றம்
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தீபாவளி அன்று வெளியிடப்பட உள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகளைக் குறைத்து, உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு இவை பலன் அளிக்கும். தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த மாதம் கூடி விவாதித்த அமைச்சர்கள் குழுவிடம் ஜிஎஸ்டியில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டவை: கட்டமைப்பு சீர்திருத்தங்கள், விகிதங்களை நெறிப்படுத்துதல் மற்றும் எளிமையான வரி முறை ஆகும். டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி-யை குறைந்தது 10 சதவீத புள்ளிகள் குறைக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது 18% உள்ள தனிநபர் பராமரிப்புப் பொருட்களான டால்கம் பவுடர், பற்பசை மற்றும் ஷாம்பூ மீதான ஜி.எஸ்.டி 5% ஆகக் குறைக்கப்படும். இது இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் மற்றும் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும்.
ஜிஎஸ்டி வரியில் ஏற்படும் மாற்றங்கள்
ஏ.சி மற்றும் டி.வி போன்ற நுகர்வோர் மின்னணுப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி 28%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்படும். இதன் மூலம் சாம்சங், எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் பயனடையும். சிறிய ஹைப்ரிட் கார்களுக்கான ஜி.எஸ்.டி 28%-ல் இருந்து 18% ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இது மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் மற்றும் டொயோட்டா இந்தியா நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் செப்டம்பர் 3-4 தேதிகளில் கூடி இந்த ஜி.எஸ்.டி குறைப்பு குறித்து முடிவெடுக்கும். சிக்கலான ஜி.எஸ்.டி அமைப்பில் இந்த மாற்றங்கள், பிரதமர் மோடி ஆகஸ்ட் 15, 2025 அன்று ஆற்றிய சுதந்திர தின உரையில், தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாகும்.
ஜிஎஸ்டி ஜீரோ வரி
நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களான UHT பால், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், பிட்சா ரொட்டி, காக்கரா, சப்பாத்தி மற்றும் ரொட்டி போன்றவற்றுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் தனது பூஜ்ஜிய வரி வரம்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் 5% மற்றும் 18% வரிவிதிப்பில் இருந்த அத்தியாவசியப் பொருட்களுக்கு இனி வரி விலக்கு அளிக்கப்படும்.
இதேபோல், முன்பு 18% வரிவிதிக்கப்பட்ட பராட்டா மற்றும் பரோட்டா ஆகியவையும் பூஜ்ஜிய வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரி விகிதங்களை சீரமைக்கும் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வி சார்ந்த பொருட்களும் இந்த வரி குறைப்பினால் பெரிதும் பயனடையவுள்ளன.












Click it and Unblock the Notifications