மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா? காங்கிரஸ் கொதிப்பு!
டெல்லி: "சண்டை நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை' என்ற அமெரிக்க வெளியுறவு செயலாளரின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா?" என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உடனே அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

பஹல்காம் அட்டாக்கிற்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாத முகாம்களை அழித்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தாக்குதல் நேற்று மாலை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று என விமர்சித்துள்ளார்.
போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும். கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், பஹல்காம் சம்பவம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எட்டப்பட்ட புரிதல் குறித்து விரிவான விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது .
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்றாம் தரப்பு தலையீட்டிற்கான கதவுகளை டெல்லி திறந்துவிட்டதா, பாகிஸ்தானுடனான ராஜதந்திர வழிகள் திறக்கப்பட்டுள்ளதா என்பது உட்பட பல கேள்விகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அரசாங்கத்திடம் எழுப்பி உள்ளார்.
"பஹல்காம், ஆபரேஷன் சிந்தூர், வாஷிங்டன் டிசியில் இருந்து முதலில் வெளியிடப்பட்ட போர் நிறுத்த அறிவிப்புகள் மற்றும் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட போர் நிறுத்த அறிவிப்புகள் குறித்து முழு விவாதத்திற்காக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications