இந்தியாவின் முதல் வீரர் இவர்தான்.. பூமிக்கு வந்த சுபான்ஷு சுக்லாவை பாராட்டி வரவேற்ற பிரதமர் மோடி!
டெல்லி: கடந்த இரு வாரங்களாக பூமிக்கு மேலே 400 கிலோமீட்டரில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இன்று வெற்றிகரமாக பூமிக்கு வந்தார். அவர் பயணித்த டிராகன் விண்கலம் வெற்றிகரமாக கலிபோர்னியா அருகே கடலில் தரையிறங்கிய நிலையில் பிரதமர் மோடி அவரை பாராட்டி வரவேற்றுள்ளார்.
இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா கடந்த ஜூன் 25ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டார். அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் அவர் விண்வெளிக்குப் புறப்பட்டார். சுமார் 24 மணி நேரம் பயணித்த மறுநாளான ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார். கடந்த 2 வாரங்களாக அவர் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டார்.

பூமிக்கு மேலே 400 கிலோமீட்டர் உயரத்தில் வலம் வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன் வீரர்களுடன் அவர் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வு பணிகளை முடித்த சுபான்ஷு சுக்லா நேற்று 3 வீரர்களுடன் சேர்ந்து பூமிக்கு புறப்பட்டார்.
டிராகன் காப்சியூல் இன்று பிற்பகல் 3 மணியளவில் பூமியை வந்தடைந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் தரையிறங்கிய காப்சியூலில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் மீட்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்தியர்கள் யாரும் செல்லாத நிலையில் முதல் முறையாக அந்த சாதனையை சுபான்ஷு சுக்லா நிகழ்த்தி உள்ளார். மேலும் நம் நாட்டின் சார்பில் விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு முன்னோட்டமாக சுபான்ஷு சுக்லா தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளர். இவரது இந்த அனுபவம் நம் நாட்டின் ககன்யான் திட்டத்துக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இதனால் சுபான்ஷு சுக்லாவின் வருகையை நம் நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவரை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய நம் நாட்டின் வீரர் சுபான்ஷு சுக்லாவை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛விண்வெளிக்கான வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பும் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை வரவேற்பதில் நாட்டு மக்களுடன் நானும் இணைகிறேன்.
சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக அவர்உள்ளார். அவரது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடியான மனநிலை உள்ளிட்டவற்றின் மூலமாக ஒரு பில்லியன் மக்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். அவரது இந்த பயணம் நம் நாட்டல் இருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான்-யை நோக்கிய மற்றொரு மைல்கல்லை குறிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications