இந்தியாவின் தற்போதைய நிலை அச்சமூட்டுகிறது.. உடனடியாக நாம் உதவ வேண்டும்.. கிரேட்டா தன்பெர்க் ட்வீட்
டெல்லி: இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் சர்வதேச சமூகம் உடனடியாக இந்தியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டில் தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு 3.46 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் 2,624ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளிலும் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 25 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில், "இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் துயரத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச சமூகம் உடனடியாக தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
நாட்டிலேயே குறிப்பாக டெல்லியில் தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கொரோனா நோயாளிகள் பல மணி நேரம் வரை காத்திருந்தே ஆக்சிஜன் உதவி பெரும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகரில் நிலைமை மிக மோசமாக உள்ளதால், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனைத்து மாநிலங்களும் கொடுத்து உதவ வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்திருந்தார்.
சர்வதேச அளவிலும் பிரிட்டன், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியாவுக்கு உதவ தாயாராக உள்ளதாக அறிவித்துள்ளன.