"எனது நாயை காணோம்.. அலட்சியமாக இருந்த போலீசாரை சஸ்பெண்ட் பண்ணுங்க.." ஐகோர்ட் நீதிபதி கடிதம்
டெல்லி: தனது நாய் தொலைந்து போனதால் கோபமடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் நீதிபதி கவுரங் காந்த். இவர் சமீபத்தில் தான் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இவர்தான் தனது நாயைத் தொலைந்து போகக் காரணமாக இருந்த தனது பங்களாவின் கதவுகளைப் பூட்டாத போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பிறகு அவரே தொடர்பு கொண்டு யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடிதம்: இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர், "மிகவும் வேதனையுடன் நான் இந்த கடிதத்தைக் கடிதத்தை எழுதுகிறேன். எனது அரசு பங்களாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளின் அலட்சியத்தாலும் திறமையின்மையாலும், எனது செல்ல நாயை இழந்துவிட்டேன். கதவைப் பூட்டி வைக்குமாறு அவர்களிடம் பல முறை நான் கூறியிருந்தேன்.
இருப்பினும், எனது இல்லத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நான் சொல்வதைக் கேட்கத் தவறிவிட்டனர்.. அவர்கள் வேலையையும் அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை.. இதுபோன்ற கடமை தவறுதல் மற்றும் திறமையின்மையால் எனது உயிருக்கும் சுதந்திரத்திற்கும் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.. எனவே இந்த விவகாரத்தில் உடனடி கவனம் தேவை
அச்சமாக இருக்கிறது: அவர்கள் தங்கள் கடமை செய்யத் தவறியுள்ளனர். இந்த அலட்சியம் எனது இல்லத்தில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தக்கூடும்.. மேலும் எனது பாதுகாப்பு குறித்தும் எனக்குப் பயமாக இருக்கிறது. எனது வீட்டின் உள்ளே வருவோர் மற்றும் வெளியே செல்வோர் குறித்த அவர்கள் கண்காணிக்கத் தவறிவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்துமாறும் அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த கடிதத்தை அவர் கடந்த ஜூன் 12ஆம் தேதி காவல் துறை இணை ஆணையருக்கு எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் படம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
போலீசார் தகவல்: இது குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த மாதம் எங்களுக்கு இந்த கடிதம் வந்தது. இருப்பினும், அவரே மீண்டும் எங்களைத் தொடர்பு கொண்டு.. தனது வீட்டில் இருந்த காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்" என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அல்லது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் வகையில் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபடக் கூடாது என்று நாட்டின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் நேற்று கடிதம் எழுதிய நிலையில், இப்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாமதமான ரயிலில் உணவு வழங்காதது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரயில்வே துறையிடம் விளக்கம் கோரியிருந்தார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டே தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications