உக்ரைன் போருக்கு இடையே.. அவசர மீட்டிங் போட்ட மோடி.. உயர்மட்ட குழுவோடு பரபரப்பு ஆலோசனை
டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், இந்தியா மீதான அதன் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் இந்திய பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24 முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
மேலும் ரஷ்யாவை தனித்து விடும் நடவடிக்கையில் மேற்கத்திய நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலைமை வகிக்கிறது. மேலும் ரஷ்யா உதவியுடன் உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.

3வது வாரமாக போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருநாடுகள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து 3வது வாரமாக போர் நீடிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யா மீதான பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மோடி ஆலோசனை
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஆகியோர் கலந்து கொண்டனர்.
உக்ரைன் போரால் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள், படைகளின் தயார் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்திய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு ஆயுதங்கள், விமானங்கள் ரஷ்யாவில் இருந்து வாங்கப்படுகிறது. அதாவது கடந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது. போர் நடவடிக்கையால் ரஷ்யா உடனான இந்தியாவின் ஆயுத இறக்குமதி பாதிக்கப்படுமா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா-ரஷ்யா உறவு
இந்தியா-ரஷ்யாவின் உறவு நீண்டகாலமானது. இந்திய பாதுகாப்பு துறையில் ரஷ்யாவின் பங்கு அதிகமாக உள்ளது. அதாவது இந்திய ராணுவத்தின் போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கி, போர் கப்பல்கள், துப்பாக்கிள் உள்ளிட்ட பல பொருட்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை ரஷ்யாவில் இருந்து தான இறக்குமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்தியா-ரஷ்யா இடையே 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

என்னென்ன பொருட்கள்
இதில் எஸ்400 ட்ரையம்ப் ஏவுகணைகள் உள்ளிட்ட பல தளவாடங்கள் குறித்த காலத்துக்குள் கிடைக்கும் என ரஷ்யா கூறியுள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து இரண்டு தால்வார் வகை போர் கப்பல்கள் வர வேண்டியுள்ளது. இதுதவிர சக்ரா 3, சக்ரா 4 என இரண்டு நியூக்ளியர் பாலிஸ்டிக் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு பெறுகிறது. இதில் ஒன்று 2025 இல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை இத்திட்டங்கள் பாதிக்கப்பட்டதால் என்ன செய்வது, அத்துடன் திட்டங்கள் பாதிப்புக்குள் உள்ளாகாமல் இருக்க இந்தியா நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும். அத்துடன் பொருளாதார தடைகளை தாண்டி ரஷ்யாவிடம் இருந்து தளவாட பொருட்கள் வாங்கினால் அமெரிக்கா கோபம் அடையும். இதையும் இந்திய சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications