டெல்லியில் மோசமான காற்றின் தரம்! பள்ளிகளுக்கு விடுமுறை.. மருத்துவமனையை நோக்கி படையெடுக்கும் மக்கள்
டெல்லி: காற்றின் தரம் இரண்டாவது நாளாக மோசமான அளவில் பதிவாகியிருப்பதால் இன்றும் நாளையும் தலைநகர் டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்கதாக அல்லாத காற்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் டெல்லியில் தற்போது 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியுள்ளது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த காற்று மாசு கடும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அதேபோல கட்டிடப் பணிகள் மேற்கொள்ளவும், கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக காற்று மாசு இதேபோல இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் டெல்லி மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
டெல்லியின் லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம் மற்றும் ஐஜிஐ ஏர்போர்ட் போன்ற இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசனமான அளவில் பதிவாகியுள்ளது. நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில், செக்டார் 62, செக்டார் 1 மற்றும் செக்டார் 116 ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.

"டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருமல், சளி, கண்களில் நீர் மற்றும் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காற்று மாசு அனைத்து வயதினரையும் பாதித்திருக்கிறது. எனவே அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்" என அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் நிகில் மோடி கூறியுள்ளார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, பஞ்சாபில் நேற்று முன்தினம் 1,921 இடங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications