ஊழலுக்கு எதிராக உருவாகி ஊழல் புகார்களாலே வீழ்த்தப்பட்ட ஆம் ஆத்மி!
டெல்லி: டெல்லியில் 3 முறை முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தேர்தலில் தோற்றுள்ளார். அதேபோல் அவரது ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் மண்ணை கவ்வி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி உருவான ஆம் ஆத்மி கட்சி இப்போது ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆட்சியையே பறிகொடுத்துள்ளது. அப்படி என்ன நடந்தது டெல்லி சட்டசபை தேர்தலில் வாங்க பார்க்கலாம்.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்துள்ளது.பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வென்றால் போதும். தற்போது பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. அதோடு தலைநகர் டெல்லி இப்போது பாஜக வசமாகி உள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட பல முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். முதல்வராக உள்ள அதிஷி போராடி வெற்றி பெற்று விட்டார்.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ஆம் ஆத்மி கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தான். 2012ல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்போது ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் முக்கிய நபராக இருந்தவர் தான் அரவிந்த் கெஜ்ரிவால்.
அதன்பிறகு அவர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். ஊழலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. 2013 சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி களமிறங்கியது. 32 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. 2வது பெரிய கட்சியாக 28 தொகுதிகளில் வென்ற ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியை பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல் முறையாக முதல்வரானார். அதன்பிறகு 49 நாட்களில் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார்.
அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி தொடர்ந்து மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆம் ஆத்மி கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தான். அதாவது டெல்லியில் கடந்த 2011ல் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. இதில் லஞ்சமாக பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. தொழிலதிபர்களிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதுபற்றி சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக உள்நோக்கத்துடன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டு மக்களிடம் எடுபடவில்லை. அதேவேளையில் பொதுமக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீதான நம்பிக்கை குறைந்தது. இது இந்த தேர்தலில் அப்படியே எதிரொலித்துள்ளது. அதேபோல் டெல்லியில் கடந்த 2015 முதல் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்தது. தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநருடனான மோதல், மத்திய பாஜகவுடன் மோதல் உள்ளிட்டவற்றால் ஆம் ஆத்மி ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் தோல்வியை சந்தித்து டெல்லியில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications