'3' அளவுகோல்.. அதில் மூணாவது 'பகீர்' ரகம்.. மாநிலங்களை 'அலர்ட்' ஆக்கும் கொரோனா தடுப்பூசி 'அலாட்'
டெல்லி: ஒவ்வொரு மாநிலத்திற்கும் எதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஒதுக்குகிறது என்று இங்கு பார்ப்போம்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2வது அலை வீசி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாளை (ஏப்.24) முதல் கோவின் தளத்தில் இதற்கான பதிவுகள் தொடங்குகிறது. கொரோனா தடுப்பூசி மீதுள்ள பயம் காரணமாக வயதானவர்கள் சிலர் இதை போட்டுக் கொள்ள பயந்தாலும், இளைஞர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

முன்கூட்டியே தகவல்
இந்த நிலையில், சில அளவுகோல் கொண்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை பகிர்ந்து அளித்து வருகிறது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், "இந்திய அரசு தனது பங்கில் இருந்து மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கும். தடுப்பூசி அளவு 15 நாட்களுக்கு ஒதுக்கப்படும். அடுத்த பதினைந்து நாட்களில் எவ்வளவு தடுப்பூசி கிடைக்கும் என்று மாநிலங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்" என்றார்.

அளவுகோல் இருக்காம்
மேலும் அவர் கூறுகையில், "மாநிலத்தின் செயல்திறனின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது, முதல் அளவுகோலாக ஒரு மாநிலம் 7 நாட்களில் எவ்வளவு தடுப்பூசியை பயன்படுத்துகிறது என்று சராசரி கணக்கிடப்படும். இரண்டாவது அளவுகோலாக ஒரு மாநிலத்தின் தொற்றின் அளவு கணக்கிடப்படும். அதாவது, எத்தனை பேர் அந்த நேரத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது கணக்கிடப்படும். "மூன்றாவதாக, கொரோனா மருந்தை எந்த மாநிலம் அதிகம் வீணடிக்கிறது என்பது கணக்கில் கொள்ளப்படும். இது ஒரு எதிர்மறை அளவுகோல். மருந்துகள் அதிகம் வீணடிக்கப்பட்டால், அந்த மாநிலங்களுக்கு மருந்துகள் எண்ணிக்கை குறையும்" என்று தெரிவித்துள்ளார். (சரியாப்போச்சு.. இந்தியாவுலயே அதிகம் கொரோனா தடுப்பூசியை வீணடித்த மாநிலம் தமிழகம் தான்)

அதிக பாதிப்பு
ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கிய பின்னர், அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது முதன் முறையாக மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறது.

இலவச தடுப்பூசி
தமிழகத்தைப் பொறுத்தவரை 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டிட தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், சில்லரை கடை வியாபாரிகள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தாமாக முன் வரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications