தெற்காசியாவில் இனி இந்தியாதான் மாஸ்.. ஜூலை 29ல் விமானப்படையில் இணைகிறது 5 ரபேல் போர் விமானங்கள்
டெல்லி: முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் 29ஆம் தேதி இந்தியாவுக்கு வருகின்றன. இந்த போர் விமானங்கள் அம்பாலா விமானப்படை விமான தளத்தில் சேர்க்கப்படுகின்றன.
Recommended Video
ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் ரஃபேல் இணைக்கப்பட உள்ளதற்கும், தற்போது லடாக் எல்லையில் சீனாவுடன் நிலவும் பிரச்சினைக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் இந்த விமானப்படை தளத்திலிருந்து மிக விரைவாக லடாக் எல்லைப் பகுதிக்கு ரபேல் போர் விமானங்கள் பறந்து சென்று ரோந்து சுற்று முடியும்.
சீன பதற்றத்திற்கிடையே.. வங்கக் கடல் வந்த அமெரிக்க நவீன போர்க் கப்பல்.. இந்திய கடற்படையுடன் பயிற்சி
5 விமானங்கள்
முன்னதாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஃபேல் போர் விமானங்கள் இம்மாத இறுதியில், இந்தியா வர உள்ளன. முதற்கட்டமாக 5 விமானங்கள் வருகின்றன. முடிந்த அளவுக்கு அவற்றை விரைவாக இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 விமானங்கள்
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்த மதிப்பு ரூ. 59,000 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் 12 விமானங்கள் என்ற வீதம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 9 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படையிடம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. ஆனால் இதுவரை அவை இந்தியா வரவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை பெற்றுக் கொண்டு, அவற்றின் சக்கரங்களுக்கு கீழே, எலுமிச்சை வைத்து பூஜை செய்துவிட்டு வந்தார்.
பயிற்சிகள்
10வது விமானம் பிரான்ஸ் நாட்டில் வைத்து,, இந்திய விமானப் படை வீரர்களால் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு விமானங்கள் மே மாதம் இந்தியா வந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அது வரவில்லை. ரஃபேல் போர் விமானம், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டால், இந்த பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, அதிநவீன விமானமாக, அது விளங்கும்.
ரபேல் வேகம்
ரபேல் விமானம் அதிகபட்சமாக 2,450 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது. வரும் அக்டோபர் மாதத்தில் இந்த போர் விமானத்தில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இந்தியாவுக்கு வரும். ஆனால் இந்தியாவின் சிறப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் நாடு தங்களுக்காக உருவாகியுள்ள ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்குகிறது. இது ஏற்கனவே நமது நாட்டுக்கு வர தொடங்கிவிட்டது.
ரபேல் சிறப்பம்சம்
ரேடாரிலிருந்து தப்பக் கூடிய சிறப்பம்சம் கொண்டது ரபேல் போர் விமானங்கள். வானிலிருந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள், 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் இலக்கை குறிபார்த்து தாக்கக்கூடிய ஏவுகணைகள், சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் வானில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தகர்க்க கூடிய ஏவுகணைகள் போன்றவை இதில் அடங்கும். இந்த ஏவுகணைகளை ரபேல் விமானங்களில் பொருத்திக்கொண்டு எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் என்பதால் இந்திய விமானப்படை மிகவும் பலம் பொருந்திய விமான படையாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள்
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்த விமானங்கள் இந்தியா வர உள்ளன. இடையில் வேறு சில நாடுகளில் தரையிறங்கி அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமானிகள் ஒவ்வொரு நாட்டிலும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது நிபந்தனை இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில், மட்டுமே விமானம் தரை இறங்க உள்ளது. எனவே இடையில் ஏற்படக்கூடிய எரிபொருள் தேவைக்காக பிரான்ஸ் நாட்டின் 2 எரிபொருள் சப்ளை செய்யும் விமானங்கள் ரஃபேல் விமானத்துடன் சேர்ந்து பறந்து வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.