உண்மையை பேசினால் தேச துரோகிகளா.. அர்னாப்பும், கங்கனாவும் தேசியவாதிகளா? சஞ்சய் ராவத் சரமாரி கேள்வி
டெல்லி: உண்மையை பேசுபவர்கள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று, ராஜ்யசபாவில், சிவ சேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
அர்ணாப் கோஸ்வாமியும், கங்கனா ரணாவத்தும்தான், தேசியவாதிகளா? என்றும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.
நேற்று, தர்மேந்திர பிரதான் (மத்திய அமைச்சர்), 'உண்மையை காது கொடுத்துக் கேளுங்கள்' என்றார். கடந்த ஆறு ஆண்டுகளாக, உண்மைகள் என்று ஜோடித்து சொல்லப்பட்ட பொய்களை நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால், இன்று, யாராவது உண்மையை பேசினால், அவர் ஒரு துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் ஆகியோரை ஏன் தேச துரோகிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
தேசத் துரோகத்தைத் தவிர அனைத்து தண்டனை பிரிவுகளையும் சிஆர்பிசியிலிருந்து அரசு நீக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்" என்று சஞ்சய் ராவத் கூறினார்.
விவசாய இயக்கத்தை அசிங்கப்படுத்த நமது அரசு சதி செய்வது நாட்டுக்கு சரியானதல்ல. ஜனவரி 26 சம்பவங்களால் நாம் அனைவரும் வெட்கப்படுகிறோம். ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணமான தீப் சித்து யார்? பல விவசாயிகள் ஜனவரி 26 முதல் காணவில்லை. என்கவுண்டரில் காவல்துறையினர் அவர்களைக் கொன்றார்களா?
யார் ஒரு தேசியவாதி? அர்னாப் கோஸ்வாமி? கங்கனா ரனாவத்? ஆகியோர்தானா. அர்னாப் கோஸ்வாமி அரசு ரகசியங்களை வெளியே போட்டு உடைத்துள்ளார். பாலகோட் தாக்குதல் குறித்து அவருக்கு முன்பே தெரியும். ஆனால் நீங்கள் அவருக்கு அடைக்கலம் தருகிறீர்கள்.
பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேச விவசாயிகள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சார்பாக போராடுகிறார்கள். அவர்கள் துரோகிகள் அல்ல. அவர்கள் காலிஸ்தானியர்கள் அல்ல. இவ்வாறு சஞ்சய் ராவத் பேசினார்.