"மிதக்கும்" தலைநகர்.. கொட்டி தீர்த்த கனமழை.. ஆலங்கட்டி மழையால் நனைந்த டெல்லி.. ஒருவர் பலி
டெல்லியில் பெய்த கனமழைக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது... அப்போது திடீரென பெய்த ஆலங்கட்டி மழையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது.. இதனால், அம்மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திடீரென தலைநகரில் கடந்த வாரம் லேசான மழை பெய்தது.. ஆனால், மறுபடியும் வெயில், புழுக்கத்தில் பொதுமக்கள் சிக்கி கொண்டனர்..

ஆலங்கட்டி மழை
பிறகு நேற்று மாலை பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது... பலத்த காற்றால் சாலையில் சென்ற வாகனங்கள் திக்குமுக்காடின... ஐஸ் கட்டிகள் வாகனங்களின் கண்ணாடியிலும், சாலையிலும் நாலாபுறமும் விழுந்து சிதறின... இப்படி ஒரு ஆலங்கட்டி மழையை கொஞ்சமும் எதிர்பார்க்காத மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பல இடங்களில் ஓடி ஓடிச் சென்று அவைகளை சேகரித்தனர்... பலர் அதை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டனர்.

கனமழை
வானிலை படுமோசமானதையடுத்து, பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.. இதனால் கார் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் பெருத்த சேதம் அடைந்தன... கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.. சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் பலத்த காற்றால் வேரோடு பெயர்ந்து விழுந்தன... இதில், ஒரு கார் மீது மரம் தொப்பென்று விழுந்துவிட்டது..

பரிதாப பலி
இதில், சிக்கிய குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.. அதேபோல, கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 65 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.. வடக்கு டெல்லியின் பல பகுதிகளிலும் காற்று சுழட்டி சுழட்டி அடித்தது.. இதில், 40 மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது...

ஜூம்மா மசூதி
மேலும் பலத்த காற்று காரணமாக டெல்லி ஜூம்மா மசூதியில் மாட பகுதி உடைந்து விழுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்ததாக டெல்லி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராம் நகரிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது... இத்தனை நாட்களும் கடுமையான வெயிலை அனுபவித்து வந்த டெல்லிவாசிகள், நேற்று மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications