அதே பாணி.. டெல்லியில் மீண்டும் பகீர்.. காருக்கு அடியே தரதரவென 1 கி.மீ இழுத்து சென்றதால் பலியான நபர்
டெல்லி: அஞ்சலி சிங் என்ற 20 வயதே ஆன இளம் பெண் ஒருவர் டெல்லியில் சுமார் 14 கிமீ காருக்கு அடியே தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பலியான நிலையில், மீண்டும் டெல்லியில் அதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று நடந்த கொடூரத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. 20 வயதே ஆன அஞ்சலி சிங் என்ற பெண் காரின் அடியே இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்தார்.
அதாவது அந்த பெண்ணை கார் மோதிய நிலையில், அவரது கால் காருக்கு அடியே சிக்கியுள்ளது. அதைக் கூட பார்க்காமல் அவர்கள் அந்த காரை சுமார் 14 கிமீ இயக்கியுள்ளனர். இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லி
தலைநகர் டெல்லியில் நடந்த இந்த கொடூர விபத்து நாட்டையே அதிரச் செய்துள்ளது. இந்த வழக்கில் தொடர்பாக பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்த அந்த பெண்ணின் ஆடைகள் இல்லாமல் போனது எப்படி என்பது குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். இருப்பினும், அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

மீண்டும் கொடூரம்
இந்தச் சம்பவம் நாட்டையே அதிர வைப்பதாக அமைந்தது. இதனிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் டெலிவரி பாய் ஒருவர் மீது கார் மோதி அவர் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. அதே புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த விபத்து இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் உயிரிழந்த நபர் உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புர சேர்ந்த கவுஷல் யாதவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரு கிமீ தூரம்
ஸ்விக்கி டெலிவரி பார்ட்னராக பணிபுரிந்து வரும் அவர், புத்தாண்டு தினத்தில் இரவு 1 மணியளவில் நொய்டாவில் உள்ள செக்டார் 14 மேம்பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது பைக் மீது அடையாளம் தெரியாத கார் மோதியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய பிறகு, அந்த டெலிவரி பாய் சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள சனி பகவான் கோயில் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் பிறகே காரில் உடல் சிக்கியிருந்ததை டிரைவர் உணர்ந்து காரை நிறுத்தியுள்ளார். அதன் பின்னரும் கூட காரை ஓட்டி வந்த அந்த நபர் உயிரிழந்த டெலிவரி பாய்க்கு உதவவில்லை.

என்ன நடந்தது
டெலிவரி பாயின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, காரை ஓட்டி வந்த அந்த நபர் தப்பியோடிவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து உயிரிழந்த கவுஷல் யாதவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரில், சம்பவத்தன்று இரவு கவுஷலுக்கு போன் செய்ததாகவும் போனை எடுத்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கவுஷல் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், சனி பகவான் கோவிலுக்கு அருகே அவரது உடல் கிடப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம்.

வழக்குப்பதிவு
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார், விபத்து குறித்து முதலில் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்த டாக்ஸி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கிடைத்த தகவலை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விபத்தில் தொடர்புடையவர்களுக்கு உரியத் தண்டனை பெற்று தர வேண்டும் என்று கவுஷிலின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை
புத்தாண்டு தினத்தில் மட்டும் டெல்லியில் இதுபோல இரண்டு கொடூர விபத்துகள் அரங்கேறியுள்ளது. அஞ்சலி சிங் இப்படி தான் சுமார் 14 கிமீ கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். இதுபோன்ற கொடூர விபத்துகள் நடைபெறாமல் இருக்க போலீசார், தங்கள் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், முறையாக விதிகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications