பாகிஸ்தானுக்கு ‘செக்’.. அடிமடியில் கை வைக்கும் இந்தியா.. IMF கூட்டத்தில் முக்கியமான மேட்டர்!
டெல்லி: பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்த சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடியுள்ளது இந்தியா. 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளன என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தது இந்திய அரசு. இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது டிரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தானின் இந்த முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானை சர்வதேச அளவிலும் தனிமைப்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. உலக வங்கி, ஆசிய வங்கி, சர்வதேச நிதியம் மூலம் அந்நாட்டிற்கு கிடைக்கும் கடனை தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், அந்நாடு சர்வதேச நிறுவனங்களின் கடனுதவி கிடைக்காவிடில் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.
பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடனை வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்துகிறது. முன்னதாக, அந்த அமைப்பின் இந்திய இயக்குநராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் அளிக்கும் கடனை தடுக்கும் முயற்சியாக இந்த மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல் குறித்து வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசும்போது, "பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியது. இந்திய ஜம்மு விமான நிலையத்தை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் துருக்கியின் டிரோன்களை பயன்படுத்தி தாக்க முயற்சித்தது. அதனை நாம் முறியடித்துள்ளோம்.
வட இந்தியாவில் உள்ள 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. 300 முதல் 400 டிரோன்களை பயன்படுத்தி 36 இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
விதிமுறைகளை மீறி எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை இந்தியாவுக்குள் ஊடுருவவிடாமல் இந்தியா விரட்டி அடித்தது.
பொய்களை பரப்பி உலகை தவறாக வழிநடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், தற்போது பாகிஸ்தானின் கீழ்த்தரமான செயல் அம்பலமாகியுள்ளது. தனது அத்துமீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பத்திந்தா ராணுவ தளத்தை பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. ஆனால், இந்தியா அதனை வீழ்த்தி தோல்வி அடைய செய்தது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என சோதித்த பாகிஸ்தான் தக்க பதிலடியை பெற்றுள்ளது. குருத்வாராவை இந்தியா குறிவைத்தது என்பது தவறான தகவல். மதக் கலவரத்தை உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. வழிபாட்டு தலங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. தாக்குதல் மூலம், பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
இன்று IMF கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் எங்கள் தரப்பை முன்வைப்போம். இந்த விஷயங்கள் குறித்த எங்கள் பார்வை சக உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முடிவெடுப்பது நிதியத்தின் கையில் உள்ளது. இன்று அதிகாலை பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா பொறுப்புடனும் போதுமான அளவு பதிலளித்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications