கனடாவுக்கு பெரிய ஆப்பு! "அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால்!"இந்தியா மட்டும் இதை செய்தால் அவ்வளவுதான்
டெல்லி: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா மட்டும் ஒரு முடிவை எடுத்தால் ஒட்டுமொத்த கனடாவும் பெரிய பிரச்சினையில் தள்ளப்படும். இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவு சில வாரங்களில் முற்றிலுமாக தலைகீழாக மாறி இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. மாறி மாறி இருவரும் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர்.

இது கனடாவில் உள்ள இந்திய மாணவர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது. மேலும், அங்குச் சென்று படிக்கத் திட்டமிட்டவர்களையும் குழப்பமடையச் செய்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொதுவெளியில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்க ரெடியாக இருக்கிறது.
முற்றும் மோதல்: கனடா நாட்டு மக்களுக்கு விசா வழங்கப் போவதில்லை என்று இந்தியா ஏற்கனவே அறிவித்துவிட்டது. காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசை ஜஸ்டின் ட்ரூடோ சுட்டிக் காட்டிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரு நாடுகளும் ஏற்கனவே மாறி மாறி தூதர்களையும் வெளியேற்றின.
முன்னதாக நேற்று புதன்கிழமை காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் பன்னூன் என்பவர் இந்தியக் கனடா இந்துக்கள் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று மிரட்டல் விடுத்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதுபோன்ற சம்பவங்கள் கனடாவில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினருக்குப் பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாகக் கனடா சென்றுள்ள இந்திய மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு இது பயத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
மாணவர்கள்: இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இப்போது கனடாவில் படிக்கும் மாணவர்களின் இந்திய பெற்றோர் கவலையில் உள்ளனர். இந்த விவகாரம் காலப்போக்கில் சரியாகிவிடும். இருப்பினும், அதற்குள் அரசியல்வாதிகள் பதற்றத்தை அதிகப்படுத்தும் வகையில் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இது அங்கே மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அதுவே எங்களுக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர் ஒருவர் கூறுகையில், "இப்போது இங்கிருக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் இது குறித்தே பேசி வருகிறோம்.. காலிஸ்தானி அச்சுறுத்தல்கள் மற்றும் இந்த பிரச்சினையில் ட்ரூடோவின் நிலைப்பாடு குறித்தே நாங்கள் விவாதித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். அங்குள்ள இந்தியர்களுக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லை. அவர்கள் இப்போது வரை பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
இந்தியா மட்டும் இதைச் செய்தால்: மேலும், இந்த மோதலில் இந்தியாவின் கை தான் ஓங்கியுள்ளது. இது இரு நாடுகளுக்குமே தெரியும். இந்தியா-கனடா உறவுகள் மேலும் மோசமடைந்து, கனடாவுக்குச் செல்லும் மாணவர்களை இந்தியாவால் தடுக்க முடியும். இது கனடா நாட்டிற்கு மிகப் பெரிய சிக்கலைத் தரும்.. இந்தியா இந்த முடிவை எடுத்தால் கனடாவில் இருக்கும் பல முக்கிய பல்கலைக்கழகங்கள் திவாலாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இந்தோ கனடா செய்தியாளர் தக்ஷ் பன்வார் கூறுகையில், "உலகின் மற்ற நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கனடா பொருளாதாரத்திற்கு 30 பில்லியன் டாலர்களை கொண்டு வருகின்றனர். இங்குள்ள மாணவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. இது கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
பெரிய பிரச்சினை: உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் கடன் வாங்கி கட்டப்பட்ட பல வீடுகளில் கடன் திரும்ப அளிக்க முடியாத சூழல் ஏற்படும். வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், மாணவர்கள் கிளம்பும் நிலை வந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி இந்த பிரச்சினை வரும் காலத்திலும் தொடர்ந்தால் கனடா செல்ல விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாகக் குறையும் என்பதால் இது கனடாவுக்குப் பெரிய சிக்கல்தான்" என்று அவர் தெரிவித்தார்.
கனடாவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் இந்தியர்கள் தான் அதிகம். தற்போது கனடாவில் உள்ள 8 லட்சம் சர்வதேச மாணவர்களில் 40 சதவீதம் இந்தியர்கள் ஆகும். அங்குள்ள தனியார் கல்லூரிகளில் கனடா மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை விட இந்திய மாணவர்கள் முதல் ஐந்து மடங்கு அதிகம் செலுத்த வேண்டி இருக்கிறது. சொல்லப்போனால் அங்குத் தனியார் கல்லூரிகளே முற்றிலுமாக இந்திய மாணவர்களால் நிதியளிக்கப்படுகிறது.
இந்த ஒரு சூழலில் இந்திய மாணவர்கள் அங்குச் செல்வதைத் தடுக்க இந்திய அரசு முடிவு செய்தால் அது கனடா அரசுக்கு மிகப் பெரிய தலைவலியாகவே மாறும்.












Click it and Unblock the Notifications