முடிவுக்கு வரும் பதற்றம்? இனி எல்லையில் பிரச்சனை இருக்காது! இந்தியா சீனா இடையே மிக முக்கிய உடன்பாடு
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் நிலவி வந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது திடீர் திருப்பமாக இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இரு தரப்பும் தனது ரோந்து பணிகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் சில காலமாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவதும், அதற்கு இந்தியா பதிலடி தருவதும் தொடர்கதையாகவே உள்ளது.

கல்வான் மோதல்: கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் மிகப் பெரிதாக வெடித்தது. அந்த மோதலை தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளும் அங்கு தங்கள் வீரர்களைக் குவித்தன. அங்கு வழக்கமான பணிகள் அனைத்தும் தடைப்பட்டன. இந்த நிலைமை சீர் செய்யத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடந்தது.
உடன்பாடு: தொடக்கத்தில் இதில் சில உடன்பாடு ஏற்பட்டாலும் அதன் பிறகு பெரியளவில் உடன்பாடு ஏற்படாமலேயே இருந்தது. இருப்பினும், ராணுவ ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதற்கிடையே இந்தியா- சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் இப்போது முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள இரு நாட்டு எல்லையான உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க இந்தியா சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்குக் குவிக்கப்பட்ட ராணுவத்தினரை இரு தரப்பும் மெல்ல வாபஸ் பெறும் என தெரிகிறது. 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா செல்லவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது..
மத்திய அரசு அதிகாரி தகவல்: இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "கடந்த பல வாரங்களாக இது குறித்து ஆலோசனை நடத்தினோம். இறுதியில் இப்போது இந்தியா-சீனா எல்லையான எல்ஏசி அருகே ரோந்து பணிகளைச் செய்வது குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020இல் அங்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ரோந்து பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது" என்றார்.
அக்டோபர் 22-23 தேதிகளில் நடைபெறும் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்குச் செல்லும் நிலையில், அதற்கு முன்பு வந்துள்ள இந்த தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர், "கடந்த சில வாரங்களாக இந்தியா சீனா இடையே தூதரக ரீதியான மற்றும் ராணுவ ரீதியான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அது இன்னும் உறுதியாகவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications