மாலத்தீவுக்கு அடுத்த அதிர்ச்சி! முதலில் சுற்றுலா.. இப்போது உதவிக்கு தரும் நிதியை குறைத்த இந்தியா
டெல்லி: இந்தியா மாலத்தீவு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியையும் மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் குறைத்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. மாலத்தீவில் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் சீன ஆதரவு பெற்ற முகமது முய்ஸு அதிபராகப் பொறுப்பேற்றது முதலே பிரச்சினை தான்.

முதலில் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை வெளியேற அவர் கேட்டுக்கொண்டார். அடுத்து அவரது அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி குறித்து மோசமான கருத்துகளைக் கூறியது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மிகக் கடுமையாகப் பாதித்தது.
பட்ஜெட்: இதற்கிடையே இன்று தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில், 2024-25 நிதியாண்டில் மாலத்தீவுக்கான உதவியை 22 சதவீதம் குறைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. அதாவது இந்தாண்டு மாலத்தீவுக்கு வளர்ச்சி உதவிக்காக ரூ.600 கோடி மட்டும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அண்டை நாடுகளுக்கு மத்திய அரசு இதுபோல நிதி அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு அரசு வழங்கப்படும் உதவிகளில் மாலத்தீவு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2023-24இல் மாலத்தீவுக்கு ரூ.770.90 கோடி உதவி வழங்கப்பட்டது.. அதற்கு முந்தைய நிதியாண்டில் அதாவது 2022-23இல் வழங்கப்பட்ட ரூ.183.16 கோடியில் இருந்து இது 300 சதவீதம் அதிகமாகும்.
கடந்த காலம்: சொல்லப் போனால் கடந்த 2023 பட்ஜெட்டில் மாலத்தீவிற்கு அரசு தொடக்கத்தில் ரூ. 400 கோடி மட்டுமே ஒதுக்கி இருந்தது. ஆனால், அதன் பிறகு அது ரூ.770.90 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது மாலத்தீவில் இந்தியாவுக்குச் சாதகமான அதிபர் ஆட்சியில் இருந்தார். ஆனால், கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலில் சீன ஆதரவு அதிபர் தேர்தலில் வென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவிற்கு இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. மாலத்தீவுக்குப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் இந்தியா உதவி வருகிறது. இந்தச் சூழலில் தான் மாலத்தீவுக்கான நிதியை இந்தியா குறைத்துள்ளது. அதேநேரம் இது மாலத்தீவுக்கு மட்டுமில்லை. பல்வேறு அண்டை நாடுகளுக்கும் இந்தியா தனது நிதியைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து வெளிநாடுகள்: வரும் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு அளிக்கும் நிதியை 10 சதவீதம் குறைத்துள்ளது. 2024-25ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு நாடுகளுக்கு உதவியாக 4883.56 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது, இது முந்தைய 2023-24ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ 5426.78 கோடியை விட குறைவாகும்.
இந்த இடைக்கால பட்ஜெட்டின் படி, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவின் உதவியை அதிகம் பெறும் நாடுகளாக இருக்கிறது. வளர்ச்சி உதவிக்காக பூடானுக்கு இந்தியா ரூ.2068.56 கோடியும், நேபாளத்துக்கு ரூ.700 கோடியும் ஒதுக்கியுள்ளது. அதேநேரம் இது கடந்த இந்தியா அளித்த தொகையைக் காட்டிலும் குறைவாகும். அதேபோல ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அளிக்கப்படும் உதவியும் குறைந்துள்ளது.
அதேநேரம் இலங்கை, ஆப்பிரிக்க நாடுகள், மொரிஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி 11.11 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாடுகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் கலாச்சார மற்றும் பாரம்பரிய திட்டங்களுக்கும், பேரிடர் நிவாரணத்திற்கும் உதவியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications