எல்லையோடு நிற்கவில்லை.. பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடியை கொடுத்துள்ளோம்.. ராஜ்நாத் சிங் பேச்சு!
லக்னோ: "தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தி உள்ளோம்" என லக்னோவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உற்பத்தி மையம் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்த ஆலை திறப்பு விழாவிற்கு நேரில் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் காரணம் உங்களுக்குத் தெரியும். நான் தற்போது டெல்லியில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்கள், பாரத மாதாவின் மணிமகுடமான காஷ்மீரில் தாக்குதல் நடத்தின. இந்திய குடும்பங்களின் குங்குமத்தை அழித்தன. அவர்களுக்கு நீதி கிடைக்கவே ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நமது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்த நாடும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு பெரும் ஆதரவைத் தெரிவித்தனர். ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இந்தியாவின் அரசியல், சமூக, தந்திரோபாய வலிமையை வெளிப்படுத்தக் கூடியது. பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையானது நமது ராணுவ வலிமையையும் பறைசாற்றியது.
நம்மைச் சுற்றி உள்ள சூழல்களைப் பார்க்கும் போது நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மிக முக்கியம். வாஜ்பாய் தலைமையில் விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி நமது வலிமையை உலகிற்கு காட்டி உள்ளனர்.
நாம் ஒருபோதும் பாகிஸ்தானின் பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானோ, நமது நாட்டின் குடிமக்களைத்தான் இலக்கு வைத்து தாக்கியது. அத்துடன் வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்கியது பாகிஸ்தான். நமது பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானில் இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்த போது நிதானமாகவே செயல்பட்டனர்.
இந்தியாவை வளர்ப்பதில் நாம் மிகுந்த பலத்துடன் முன்னேற வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவுக்கு பெருமை. நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க இது ஒரு சந்தர்ப்பம். வெறும் 40 மாதங்களில், இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது. உத்தர பிரதேச முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுடன் மட்டும் நமது நடவடிக்கையை நிறுத்திவிடவில்லை. ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்த்தி உள்ளோம்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி உள்ளோம். பாகிஸ்தான் ராணுவம் தான் வழிபாட்டு தலங்கள், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்தை துளிகூட இந்தியா சகித்துக் கொண்டிருக்காது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications