அமெரிக்காவை விட்டுத்தள்ளுங்க.. அடிமடியில் கை வைத்த இந்தியா! சீனா இப்போது நம்ம பக்கம்!
டெல்லி: வரியை போட்டு காலை வாரிய அமெரிக்காவை இந்தியா தற்போது கழற்றிவிட தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, சீனாவுடன் தனது வர்த்தக உறவை பலப்படுத்த இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளும் 127 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வர்த்தகம் செய்தன. இதில் 109 பில்லியன் டாலர் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகின.

இந்தியாவுக்கு சீனா ஏன் தேவை?
இந்தியாவின் தொழில்துறை சீனாவின் தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து சுமார் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு மற்றும் மின்சார உபகரணங்களை இந்தியா இறக்குமதி செய்தது. இது ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் வரை மின்னணுவியல் அசெம்பிளிக்கு இந்திய சீன பாகங்களை எந்த அளவுக்கு நம்பியுள்ளது என்பதை காட்டுகிறது. இதேபோல் மருந்துப் பொருட்களையும் சீனாவிலிருந்து நாம் இறக்குமதி செய்து வருகிறோம்.
மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் துறைகளில் நாம் நீண்ட தூரம் இன்னும் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு அரிய வகை பூமி காந்தங்கள் தேவை. உலகம் முழுவம் அரிய வகை பூமி காந்தங்களின் ஏற்றுமதியை 95% சீனாதான் கட்டுப்படுத்தி வருகிறது. எனவே சீனா இல்லாமல் நம்மால் நம் இலக்கை அடைய முடியாது.
சீனாவுக்கு இந்தியா ஏன் தேவை?
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் சீனாவின் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. சீனாவில் உள்நாட்டு வளர்ச்சி மந்தமடைந்து வருவதால், மார்க்கெட்டுக்காக இந்தியாவை நாட வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த ஆண்டில், இந்தியா சுமார் 156 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தது. இந்திய விற்பனையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் சியோமி, விவோ மற்றும் ஒப்போ போன்ற சீன சாதனத் தயாரிப்பாளர்களுக்கு, இந்தியாவின் நடுத்தர வர்க்கம் ஒரு பொன் சுரங்கமாகும்.
உலகிலேயே மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா இருக்கிறது. 2024-ஆம் ஆண்டில் சுமார் 4.3 மில்லியன் பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், இந்தியாவை சீனா ஒரு புதிய இலக்கு சந்தையாகப் பார்க்கிறது. குறிப்பாக BYD போன்ற சீன வாகன உற்பத்தியாளர்கள், இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் 40% வரை பங்கை கைப்பற்றும் இலக்கைக் கொண்டுள்ளனர்.
முதலீடுகளுக்கு அப்பால்
சப்ளை சங்கிலிகளுக்கு அப்பால், சீனாவின் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் பில்லியன்களை முதலீடு செய்துள்ளன. அலிபாபா குழும ஹோல்டிங் லிமிடெட் மற்றும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் Paytm, Zomato, Ola Electric மற்றும் Byju's போன்ற யூனிகார்ன் நிறுவனங்களுக்கு நிதி அளித்து, இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் ஆர்வத்தின் மீது முதலீடு செய்துள்ளன.
இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதில் பலன்களைப் பார்ப்பது போலவே, சீன நிறுவனங்களும் தங்கள் இந்திய நண்பர்களுடன் ஒத்துழைப்பதில் நன்மைகளைக் காண்கின்றன. இந்தியாவின் சிக்கலான ஒழுங்குமுறை சூழலை எதிர்கொள்வதற்கும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தைகளில் ஒன்றிற்கான அணுகலைப் பெறுவதற்கும் இது உதவுகிறது.
இந்தியா மற்றும் சீனா உறவு மேம்படுமா?
இந்தியாவுக்கும்-சீனாவுக்கும இடையே மணக்கசப்பு இருப்பது உண்மைதான். 2020 கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பிறகு இது அதிகரித்தது. இருப்பினும் காலத்தால் ஆறாத வடு எதுவும் இல்லை. எனவே இரு தரப்பும் அமைதியை விரும்ப முன் வந்திருக்கின்றன.
2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த மாதம், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர் பெய்ஜிங்கிற்குப் பயணம் செய்தார். இவரை தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் பிரதமர் மோடி சீனா செல்கிறார். இதற்கிடையில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக புது தில்லிக்கு வருகை புரிந்தார். இவை அனைத்தும் பழைய காயங்களை மறந்து சேர்ந்து பயணிக்க இருப்பதை தெளிவுப்படுத்துகிறது.
இந்த உறவு முன்னேற்றத்திற்கான மற்ற அறிகுறிகளும் தென்படுகின்றன. இந்தியாவுக்கான யூரியா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளது, பதிலுக்கு சீன நாட்டவர்களுக்கான சுற்றுலா விசாவை இந்தியா மீண்டும் வழங்கியுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் தயாராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தின் இரண்டாம் பதவிக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நெருங்கிய உறவுகள் ஏற்பட்டாலும், அமெரிக்காவின் கொள்கை மாற்றமும் இந்த உறவு மேம்பாட்டிற்கு ஒரு காரணமாகும். டிரம்பின் முதல் அதிபர் பதவிக்காலத்தில், சீனாவுக்கு எதிரான ஒரு நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா இந்தியாவைப் பார்த்தது.
பதிலடிக்கு ரெடியான இந்தியா
இந்தியா-சீனா உறவு இன்னும் மேம்படுமா என தெரியாது. ஆனால், அமெரிக்காவின் அச்சுறுத்தல் இருக்கும் வரையில் இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் உறுதியாக இருக்கும். அதேபோல பிரிக்ஸ் நாடுகளுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ளும். குறிப்பாக சீனாவுடன் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்தியா ரெடியாகி வருகிறது. இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பொருளதார அச்சுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications