யூ டர்ன் போட்ட மாலத்தீவு! மோடியை நேரில் வந்து சந்தித்த அதிபர் முய்சு! இந்தியர்களை கவரவும் செம பிளான்
டெல்லி: மாலத்தீவு அதிபர் முய்சு நான்கு நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த நிலையில், அதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒரு மேஜர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா- மாலத்தீவு இடையே கடந்த பல ஆண்டுகளாக நல்ல ஒரு உறவே இருந்தது. ஆனால், கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் முய்சு எப்போது வென்று அதிகாரத்திற்கு வந்தாரோ.. அப்போது முதல் நிலைமை மோசமானது.

குறிப்பாக மாலத்தீவில் இருந்த இந்திய வீரர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற வைத்தார். இது இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட முக்கிய விரிசலாக இருந்தது. இருப்பினும், இதைக் கண்டு கொள்ளாமல் இந்தியா தொடர்ந்து மாலத்தீவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தது.
சர்ச்சை: இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் இந்தியப் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்று, அங்கு எடுத்த சில போட்டோகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த போட்டோவுக்கு சம்பந்தமே இல்லாமல் சில மாலத்தீவு அமைச்சர்கள் மிகவும் கீழ்த்தரமான கருத்துகளைப் பதிவிட்டனர். இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் மொத்தமாகத் தவிர்த்தனர். இது மாலத்தீவு பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்தது.
இதன் பின்னரே இந்தியா உடனான உறவைச் சீர்படுத்த மாலத்தீவு முயற்சிகளை எடுக்கத் தொடங்கியது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாகக் கடந்த ஜூன் மாதம் பதவியேற்ற நிலையில், அந்த விழாவில் நேரடியாக அதிபர் முய்சு கலந்து கொண்டிருந்தார். மேலும், இந்தியா குறித்து எந்தவொரு விமர்சனத்தையும் செய்யாமல் இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இப்போது நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
நரேந்திர மோடி: டெல்லி வந்த அதிபர் முய்சு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனைகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் தான் இப்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரு நாட்டு உறவில் முக்கிய திருப்பமாக இந்தியாவின் ரூபே கார்டுகள் இப்போது மாலத்தீவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாலத்தீவு செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரியளவில் உLவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியர்கள் வருகை மாலத்தீவில் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அதை பூஸ்ட் செய்யவும் இது நிச்சயம் உதவும்.
ரூபே: சர்வதேச அளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பொதுவாக விசா மற்றும் மாஸ்டர் கார்ட் நிறுவனங்களைச் சேர்ந்தவையே வழங்கும். ஆனால், இதற்குப் போட்டியாக இந்தியா கடந்த 2012ம் ஆண்டு ரூபே கார்டுகளை அறிமுகம் செய்தது. இது முதலில் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், அது மெல்ல வெளிநாடுகளிலும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பூட்டான், பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் ரூபே கார்டுகளை பயன்படுத்த முடியும். இப்போது இந்த லிஸ்டில் மாலத்தீவும் இணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications