பாரத் என மாறும் இந்தியா? நாட்டின் பெயர் மாற்ற நடைமுறை என்ன? நாடாளுமன்றத்தில் எப்படி நடக்கும்?பின்னணி
டெல்லி: வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய மத்திய அரசு சட்ட திருத்த மசோதா கொண்டு வர உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் நாட்டின் பெயரை எப்படி மாற்ற மத்திய அரசு நினைத்தால் நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. நம் நாட்டின் பெயர் ‛இந்தியா' என இருக்கும் நிலையில் அந்த பெயரிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இதற்கிடையே தான் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு டின்னர் விருந்து வழங்க உள்ளார். இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் President of India என்பதற்கு பதில் President of Bharat என அச்சிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியின் முதல் நடவடிக்கை என கூறப்படுகிறது. அதாவது எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என தங்களின் கூட்டணிக்கு பெயர் சூட்டியுள்ளன. இதனால் இந்தியா என பிரதமர் மோடி பேசினால் அது ‛இந்தியா' கூட்டணியை குறிக்கவும் வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி தான் ஜனாதிபதியின் அழைப்பிதழில் President of Bharat என இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு வரும் 18ம் தேதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய வேண்டும் என்றால் எத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு: அதாவது நம் நாட்டை இப்போது இந்தியா என்றும் பாரத் என்றும் அழைக்கலாம். ஏனென்றால் இந்த 2 பெயர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இத்தகைய சூழலில் தான் மத்திய பாஜக அரசு நம் நாட்டுக்கு இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என பெயர் சூட்ட நினைத்தால் முதலில் அதுதொடர்பாக சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்று தான் நம் நாட்டை ‛‛இந்தியா, அதுதான் பாரத்'' என்று கூறுகிறது. இதனால் அரசியலமைப்பு சட்டம் ஒன்றில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும். இதையடுத்து நம் நாட்டை இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற பெயரில் அழைக்க முடியும். மேலும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தையும் வெறுமனே செய்து முடித்து விட முடியாது. ஏனென்றால் அதற்கும் சில விதிகள் வரையறைக்கப்பட்டுள்ளன.
அதாவது இந்திய அரசியலமைப்பின் 368 வது பிரிவு தான் ஒரு அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பதை கூறுகிறது. அதன்படி அரசியலமைப்பு சட்டத்தை 2 வழிகளில் திருத்தம் செய்ய முடியும். ஒன்று சிம்பிள் மெஜாரிட்டி திருத்தம் (Simple Majority Amendment ). மற்றொன்று ஸ்பெஷல் மெஜாரிட்டி திருத்தம் ( Special Majority Amendment) என்பதாகும்.
இந்த 2க்கும் சின்ன வித்தியாசம் உள்ளது. அதாவது சிம்பிள் மெஜாரிட்டி திருத்தம் என்பது சபையில் 50 சதவீத உறுப்பினர்களின் ஆதரவுடன் மேற்கொள்வது. இது இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவின் கீழ் புதிய மாநிலம், மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வது உள்ளிட்டவற்றை மட்டுமே இதன்படி மேற்கொள்ள முடியும்.
மாறாக பிற சட்ட திருத்தங்களுக்கு ஸ்பெஷல் மெஜாரிட்டி திருத்தம் என்பது தான் பின்பற்றப்பட்டு வருகிறது. இது சிம்பிள் மெஜாரிட்டி மூலம் நிறைவேற்றப்படுவதில் இருந்து வேறுபாடானது. அதாவது தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 1யை மாற்றம் செய்வது உள்பட பெரும்பாலான சட்ட திருத்தங்கள் என்பது ஸ்பெஷல் மெஜாரிட்டி திருத்த முறையில் தான் நடக்கும்.
இந்த ஸ்பெஷல் மெஜாரிட்டி திருத்தம் என்பது நாடாளுமன்றத்தில் 66 சதவீதம் பேர் அதாவது 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்து ஓட்டளிப்பில் பங்கேற்று மசோதா வெற்றி பெற வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் 1ல் திருத்தம் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications