இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா ஒரே நாளில் 96551 பேர் பாதிப்பு - 1209 பேர் மரணம்
இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு. ஒரே நாளில் 96551 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 96500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45,62,415 பேராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 35.42 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 1209 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76271 பேராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் பேரை தொடப்போகிறது. தினசரியும் 11 லட்சம் மாதிரிகள் தினசரி பரிசோதனை செய்யப்படுகின்றன. இதுவரை நாடு முழுவதும் 5.50 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று புதிய உச்சமாக 96551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நேற்று மட்டும் 70880 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று உறுதி
இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு 45,62,415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

35.42 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,42,664 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 70880 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,43,480 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

76 ஆயிரம் பேர் மரணம்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76,271 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 1.67 சதவிகிதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.65 சதவிகிதமாகவும் உள்ளது.

முதலிடம் பிடித்த இந்தியா
கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பிரேசிலில் 40431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 38811 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக மரணங்கள்
உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5992 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் இந்தியாவில்தான் அதிக அளவில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்காவில் 1090 பேரும், பிரேசிலில் 922 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தினசரியும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா விரைவில் முதலிடத்தை பிடித்து விடும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications