இந்தியாவில் 15 லட்சம் பேரை நெருங்கிய கொரோனா - உலக அளவில் வேகமாக பரவுகிறது
உலகிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியாதான் என்று புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,83,156 பேராக அதிகரித்துள்ளது. உலகிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியாதான் என்று புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல், தினசரி பரிசோதனை எண்ணிக்கையையும் இந்தியா அதிகரித்துள்ளது. ஞாயிறன்று 5 லட்சத்து 15 ஆயிரத்து 472 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நேற்றும் அதே போல 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
கடந்த 24 மணிநேரத்தில் 47,704 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,83,156ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 9,52,743 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து...மனித பரிசோதனை... இந்தியாவில் 5 இடங்கள் தேர்வு!!
வேகமாக பரவும் கொரோனா
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டப்போகிறது. இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்த இடத்திலும் உள்ளது மகாராஷ்டிரா.
பத்து இடங்களில் யார் யார்
தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் 17வது இடத்தில் உள்ளது. டெல்லியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் ஆந்திரா நான்காவது இடத்திலும் கர்நாடகா 5வது இடத்திலும் உள்ளது. உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், தெலுங்கானா, பீஹார் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியாவில் பரிசோதனை
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் பரிசோதனை எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 11.8 பேர் என்ற விகிதத்திலும், பிரேசில் நாட்டில் 11.93 பேர் என்ற விகிதத்திலும் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில், ஆயிரம் பேருக்கு 152.98 பேர், ரஷ்யாவில் 184.34 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் லாக்டவுன்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகள், பல தளர்வுகளுடன் ஆறாவது கட்டமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் லாக்டவுன் காலம் முடிவுக்கு வருமா நீட்டிக்கப்படுமா என்று இன்னும் இரு தினங்களில் தெரியவரும். தனி மனித இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.