எப்போ சொன்னோம்.. வரியை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் சொன்னதற்கு மத்திய அரசு ரியாக்ஷன்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், பதிலுக்கு அவர்களும் வரி விதிக்கப்போவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியா வரி குறைப்பதற்கு ஒப்புக்கொண்டதாக பேசிய நிலையில், நாங்க எப்போது அப்படி கூறினோம் என்று இந்தியா பதில் தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைப்பது தொடர்பாக எந்த முடிவையும் இந்தியா எடுக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பேசி வந்தார் டிரம்ப். குறிப்பாக இந்தியா அதிக வரி விதிப்பதாகவும் இந்தியாவை வரி அரசன் எனவும் டிரம்ப் விமர்சித்து வந்தார்.

நண்பர்கள், எதிரிகள் என அனைவரும் வரி விதிக்கிறார்கள்
இதற்கிடையே, அண்மையில் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து இருந்தார். அப்போது இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது கூட இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், அதேபோல் அமெரிக்காவும் வரி விதிப்பு செய்யும் என்று கூறினார். அதன்பிறகும் பலமுறை வரி விவகாரத்தில் இந்தியாவை டிரம்ப் விமர்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‛‛இந்தியா நமக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை வசூலிக்கிறது.
சீனாவின் சராசரி வரி என்பது நம் தயாரிப்புகளுக்கு நாம் வசூலிப்பதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது. தென்கொரியாவின் சராசரி வரி என்பது நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. நண்பர்கள் மற்றும் எதிரிகள் என்று அனைவரும் இதனை செய்கிறார்கள். இது அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை. ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரிகள் அமலுக்கு வரும்" என்றார்.
எந்த முடிவையும் இந்தியா எடுக்கவில்லை
இதன் தொடர்ச்சியாக கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "அமெரிக்காவுக்கு அதிக வரிகளை விதிக்கும் இந்தியா தற்போது வரியை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான், அமெரிக்க பொருட்களுக்கு வரியை குறைப்பது தொடர்பாக எந்த முடிவையும் இந்தியா எடுக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
நாடாளுமன்ற குழுவிடம் இந்தியா இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறது என பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் மீண்டும் மீண்டும் எழுப்பும் இந்த வரி விவகாரத்தில் தீர்வு காண செப்டம்பர் வரை அவகாசம் கேட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகத்துறை செயலாளர் சுனில் பரத்வால் கூறுகையில், "இந்தியாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் இருநாடுகளுக்கும் பலனளிக்கும் வகையிலான ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வருவதாகவும், உடனடி வரி கட்டண மாற்றங்கள் செய்வதை விட நீண்ட கால பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்திவருகிறது" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications