“இன்று இரவு தாக்கினால் தக்க பதிலடி தரப்படும்”.. பாகிஸ்தானுக்கு 'ஹாட்லைன்' மெசேஜ் அனுப்பிய இந்தியா!
டெல்லி: "பாகிஸ்தான் இன்று இரவு மீண்டும் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என ஹாட்லைனில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் அனுப்பி உள்ளோம்." என டிஜிஎம்ஓ ராஜீவ் கய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று, ஆபரேஷன் சிந்தூர் குறித்து முப்படை அதிகாரிகள் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததோடு எல்லை பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக நேற்று மாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தின. இதனால், மீண்டும் ஒரு பதற்றச் சூழல் உருவானது. இன்று காலை முதல் எல்லையோர பகுதிகளில் அமைதி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று மேற்கு எல்லைகளின் இராணுவத் தளபதிகளுடன் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் எந்தவொரு போர் நிறுத்த மீறலுக்கும் எதிர்வினையாற்ற இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரத்தையும் ராணுவத் தலைமைத் தளபதி வழங்கினார்.
இந்நிலையில், இன்று முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் கய் பேசுகையில், "பயங்கரவாத கட்டமைப்புகளைத் தகர்க்கவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
அதன் மூலம், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவூப், முடாசிர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்ட ரவூப் அசாரை நாங்கள் ஒழித்துவிட்டோம். குருத்வாரா, கோயில்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் பலியாகியுள்ளனர். எங்களுடைய மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை.
பாகிஸ்தான் அவசரமாக தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக தொடர்பு கொண்டது. மே 10ஆம் தேதி காலை என்னை பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொடர்பு கொண்டார். நேற்று மாலை 3.35 மணிக்கு இருநாட்டு டிஜிஎம்ஓக்களும் பேசினோம்.
ராணுவ நடவடிக்கையை நிறுத்தும் முடிவை மீறி இன்று இரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். ராணுவ தலைமை தளபதி எங்களுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளார். பாகிஸ்தான் இன்று இரவு மீண்டும் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என ஹாட்லைனில் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications