கூடுதல் நிவாரணம்.. பொருளாதார ஊக்கம்.. விரைவில் மத்திய அரசு அறிவிக்கும்... நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராட ஏழைகள் மற்றும் தொழில்துறையினருக்கு உதவ புதிய நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஊக்கத்தை இந்தியா விரைவில் அறிவிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை(நேற்று) தெரிவித்தார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை எதிர்கொள்ள வசதியாக ஏற்கெனவே ரூ. 1.76 லட்சம் கோடிக்கு சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ஆனாலும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த சலுகைகள் போதுமானதாக இருக்காது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் உலக வங்கியின் மேம்பாட்டுக் குழு வின் 101 வது கூட்டத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பங்கேற்ற சீதாராமன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேவைப்படும் நாடுகளுக்கு முக்கியமான மருந்துகளை இந்தியா தொடர்ந்து வழங்குவதாக உலக சமூகத்திற்கு உறுதியளித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை
கடந்த மாதம் அரசு அறிவித்த ஏழைமக்களுக்கான நலன் தரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் சுகாதார ஊழியர்களுக்கு இலவச சுகாதார காப்பீடு , பண பரிமாற்றம், இலவச உணவு மற்றும் எரிவாயு விநியோகம், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை அடங்கிய 23 பில்லியன் டாலர் (ரூ. 1.70 லட்சம் கோடி) மதிப்புள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

வணிக நிறுவனங்கள்
வணிக நிறுவனங்களுக்கு, குறிப்பாக சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு, திடீரென பொருளாதார வாய்ப்பை இழப்பதை சமாளிக்க, வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்க, நிதி சேவைகள் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் தொடர்பான சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்க விஷயங்களில் அரசாங்கம் நிவாரணம் வழங்கியுள்ளது. ரிசவர்வ் வங்கியும் அதற்கு இடமளித்துள்ளது, சந்தை ஏற்ற இறக்கத்தைக் குறைக்க கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சுகாதார அமைப்பு
மனிதாபிமான உதவி வடிவத்தில் கூடுதல் நிவாரணம் வழங்குவதற்கும், வரும் நாட்களில் பொருளாதார ஊக்கத்தை வழங்குவதற்கும் அரசாங்கம் விரிவாக செயல்பட்டு வருகிறது. மக்கள்தொகையின் அளவைக் கருத்தில் கொண்டு, இந்தியா ஒரு பெரிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறக்கூடும் அபாயத்தில் இந்தியா இருந்தது. ஆனால் ஆனதல் அதற்கு எந்தவொரு வாய்ப்பும் உருவாகாமல், இந்திய சுகாதார அமைப்பு திறம்பட செயல்படுவதற்காக மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.

பயணக்கட்டுப்பாடு
இதில் முக்கியமான நடவடிக்கைகள் சமூக விலகல், பயணக் கட்டுப்பாடுகள், பொது மற்றும் தனியார் துறைகளில் இருந்து வேலை செய்வதும், தங்குவதும், மற்றும் அளவிடப்பட்ட சோதனை, திரையிடல் மற்றும் சிகிச்சையை மையமாகக் கொண்ட நேரடி சுகாதார தலையீடுகள் தொற்றுநோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியுள்ளன. உலகளாவிய சமூகத்தின் பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில், நாங்கள் தேவைப்படும் நாடுகளுக்கு முக்கியமான மருந்துகளை வழங்குகிறோம். மருந்து தேவைப்படுவோருக்கு தொடர்ந்து வழங்குவோம்" என்றார்.

பெரும் எதிர்பார்ப்பு
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராட ஏழைகள் மற்றும் தொழில்துறையினருக்கு உதவ புதிய நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஊக்கத்தை இந்தியா விரைவில் அறிவிக்கும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கான சலுகைகள், வரிச் சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் வசதி உள்ளிட்ட சலுகைகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கெனவே சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி கிடைக்க வசதியாக நிதியம் ஒன்றை உருவாக்குவது குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே சலுகைகள் எப்படி இருக்கும் என்பது தொழில்துறையினர் மத்தியில பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications