26/11 மும்பை தாக்குதலின் மாஸ்ட்டர் மைன்ட்.. ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
டெல்லி: மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியும், ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மிகவும் பிஸியான நகரமான மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் (26/11) உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைகளில் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் ஏந்தி வந்த பயங்கரவாதிகள் கண்ணில் படுபவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டு தள்ளினார். இதில் சுமார் 164 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்தான் ஹபீஸ் சயீத்.

இவரை பிடிக்க இந்தியா நீண்ட காலமாக போராடி வருகிறது. அமெரிக்கா இவரது தலைக்கு ரூ.83 கோடியை நிர்ணயித்துள்ளது. ஆனால் ஹபீஸ் சையது தற்போது வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார். 26/11 தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் அரசு இவரை, பயங்கரவாத திட்டங்களுக்கு நிதி திட்டியதாக கூறி கைது செய்தது. இப்படி இவர் அடிக்கடி கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.
எனவே இவரை எப்படியாவது இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று இந்தியா முயன்று வரும் நிலையில், தற்போது இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. சயீத்தை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இதுபோன்று குற்றவாளிகளை ஒப்படைக்கும் முறைகள் இல்லாததால் சயீத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே அந்நாட்டின் சட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சயீத் தற்போது சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் மீதான எதிர்கால தாக்குதல்களை முறியடிக்க வேண்டும் எனில் சயீத்தின் நடவடிக்கைகளை முடக்கினால் மட்டுமே முடியும். எனவேதான் வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக அணுகியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை.
மறுபுறம் சயீத்தின் மகன் மகன் தல்ஹா சயீத் பாகிஸ்தானில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். ஒருவேளை இவர் அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துவிட்டால் சயீத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications