சண்டை ஓவர்! பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதி தொடரும்! இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
டெல்லி: பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதல் நடந்து வந்த நிலையில், சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்நிலையில் தான் பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு தொடரும் என வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

"துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராகவும் இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இனியும் அது தொடரும்" என வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மார்கோ ரூபியோவிடம் பேசுகையில், "இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் பொறுப்பானது. அது அப்படியே தொடர்கிறது." எனத் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான், இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. வரும் 12 ஆம் தேதி இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications