இந்தியா எடுத்த மேஜர் முடிவு! "டிரம்ப் என்ன செய்தாலும் பரவாயில்லை!" அமெரிக்காவுக்கு செக்மேட்? பின்னணி
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிப்பேன் என்று டிரம்ப் தரப்பு இந்தியாவை மிரட்ட முயன்று வருகிறது. இதற்கிடையே டிரம்ப் என்ன தான் மிரட்டினாலும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதைத் தொடரப்போவதாகவே இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் மிரட்டல்களுக்காகத் தனது பிளானை இந்தியா மாற்றாது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த வாரம் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் தொடர்ந்து வாங்குவதே உக்ரைன் போர் தொடர காரணம் என்றும் இதனால் இந்தியாவுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். அதன்படி இந்தியாவுக்கு 25% வரி மற்றும் அபராதம் என்ற அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

இந்தியா மேஜர் முடிவு
அதோடு நில்லாமல் நேற்று கூட இந்தியாவுக்கான வரிகளை மேலும் அதிகரிப்பேன் என டிரம்ப் கூறினார். இப்படி இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இருப்பினும், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறது. இந்த நேரத்தில் டிரம்பின் மிரட்டலைத் தாண்டி தொடர்ந்து ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
திட்டவட்டம்
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் அத்தியாவசிய எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்த முடிவுகளை அமெரிக்காவின் நிலையற்ற கொள்கை முடிவுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. டிரம்ப் என்ன சொன்னாலும் சரி, இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் இருக்காது என்று இரண்டு மூத்த இந்திய அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியைக் குறைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதைப் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி உறுதி செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதையே குறிப்பிட்டார். டிரம்ப் மிரட்டல் குறித்து அவர் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்ட போதிலும், ரஷ்யா தொடர்பான கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை அவர் மறைமுகமாகக் கூறினார். ஒவ்வொரு நாட்டிற்கும் இந்தியாவுக்குமான உறவு தனித்துவமானது என்றும் மூன்றாம் நாட்டின் கண்ணோட்டத்தில் அவை பார்க்கக்கூடாது என்றும் ஜெய்ஸ்வால் கூறினார்.
டிரம்ப் அதிருப்திக்கு காரணம் என்ன
டிரம்ப்பை பொறுத்தவரை அவர் ரஷ்யா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை என்பதே டிரம்பின் கோபத்திற்குக் காரணம். இதன் காரணமாகவே அவர் விரக்தியில் இருக்கும் டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல இந்தியா அமெரிக்கா வணிக ஒப்பந்தமும் இன்னும் இறுதியாகவில்லை. விவசாயம் மற்றும் பால் சந்தையில் அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு அனுமதி அளிக்க இந்தியா யோசித்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு யுக்தியாகவும் டிரம்ப் இதைப் பயன்படுத்தி இருப்பார் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஒன்னும் மாறாது
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினாலும் சீனா நிறுத்தாது என்றும் இதனால் எந்தவொரு மாற்றமும் வந்துவிடாது என்றும் முன்னாள் இந்தியத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் ரஷ்யாவுக்கான தூதருமான பங்கஜ் சரண் கூறுகிறார். பங்கஜ் சரண் மேலும் கூறுகையில், "சரி, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டது என வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட சீனா அதை நிறுத்தாது. ரஷ்யாவிடம் இருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்கும். இது சீனாவுக்கே தொடர்ந்து பயனளிக்கும்" என்றார்.
உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா 1%க்கும் குறைவாகவே கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்து வந்தது. ஆனால், இந்த இப்போது இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானது ரஷ்யாவில் இருந்தே வருகிறது. தொடக்கத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவது சர்வதேச சந்தையில் அதன் விலையைக் குறைவாக வைத்திருக்க உதவுகிறது என்பதால் மேற்குலக நாடுகள் இதை ஆதரித்தன.
செக்மேட்
ஆனால், இப்போது திடீரென மேற்குலக நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. குறிப்பாக டிரம்ப் வரி மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். அதைக் கேட்டு இந்தியா உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றினால் அது பெரிய சிக்கலையே கொடுக்கும். இதன் காரணமாகவே டிரம்ப் என்ன சொன்னாலும் ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குவதில் இந்தியா தெளிவாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications