புத்தாண்டு தினத்தன்று கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களால் ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடி!
டெல்லி: கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் லடாக்கில் புத்தாண்டு தினத்தன்று மூவர்ணக் கொடியை இந்திய ராணுவம் ஏந்தி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 4 பேர் மட்டுமே பலியானதாக சொல்லப்பட்ட நிலையில் 35 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்திருந்தது.
கடந்த 1967 ஆம் ஆண்டு இந்தியா- சீனா இடையே மோதலுக்கு பின்னர் கால்வன் பள்ளத்தாக்கில் 2020ஆம் ஆணடு நடந்தது மிகப் பெரிய மோதலாகவே பார்க்கப்பட்டது. அன்று முதல் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எல்லைகளில் இருநாட்டு துருப்புகளும் குவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் கிராமங்களை சீனா கட்டி வருவது செயற்கைகோள் படங்களில் தெரியவந்தது.

இந்தியாவின் மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுடயை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் சீனா, இந்திய பகுதிக்குள்பட்ட இடங்களை சீனமொழியில் பெயர்மாற்றம் செய்து வரைபடத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அது போல் அண்மையில் 15 இடங்களுக்கு சீனா தங்கள் மொழியில் பெயரை மாற்றி வைத்தது. சீன அரசின் புதிய எல்லைப் பாதுகாப்பு சட்டம் கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததை முன்னிட்டு பெயர் மாற்றத்தை வெளியிட்டது.
இதுகுறித்து இந்திய அரசு கடந்த வியாழக்கிழமை கூறுகையில், இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா அதன் மொழியில் பெயர்களை மாற்றி வருகிறது. அருணாச்சலமும் பெயர் மாற்றிய அனைத்து இடங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது. பெயரை மாற்றி வைப்பதால் உண்மை என்றுமே மாறாது என தெரிவித்திருந்தனர். இதே போல் கடந்த ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு அருணாச்சல் பிரதேசத்தில் பெயர் மாற்றம் செய்ய சீனா முயற்சித்தது.
லடாக்கில் கடுங்குளிரிலும் சட்டவிரோதமாக சீனா தங்கள் நாட்டு ராணுவத்தை குவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதாவது புத்தாண்டு தினத்தன்று கால்வன் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்திய படி இருந்த புகைப்படம் வெளியானது. அத்துடன் சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 30க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் புத்தாண்டு அன்று கால்வன் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளில் இந்திய தேசிய கொடியை நமது ராணுவ வீரர்கள் ஏற்றினர். இந்த புகைப்படத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
Recommended Video

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மைனஸ் 8 டிகிரி சென்டிகிரேட்டில் அந்த உறைபனியிலும் நமது இந்திய வீரர்களின் வரவேற்பு சிறப்பாக இருந்தது. அஸ்ஸாம் ரிஜிமென்ட் மற்றும் அருணாச்சல படையைச் சேர்ந்த வீரமிக்க இந்திய ராணுவத்தினருடன் அருணாச்சல பிரதேசத்தின் போம்டிலாவில் நேரம் செலவிட்டேன். புத்தாண்டு அன்று நமது வீரதீரமிக்க வீரர்கள் கால்வன் பள்ளத்தாக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளனர் என குறிப்பிட்டு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications