இஸ்ரேல் ஈரான் மோதலுக்கு நடுவே மாட்டிக் கொண்ட அந்த 17 இந்தியர்கள்.. இப்போது கதி என்ன.. பரபர தகவல்
டெல்லி: ஈரான்- இஸ்ரேல் மோதல் தொடரும் நிலையில், ஈரான் கடத்திய சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் காசாவில் இருக்கும் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மாதக் கணக்கில் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே இப்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்துள்ளது. சிரியாவில் உள்ள தனது தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
மோதல்: இப்படி இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்த கப்பலை ஈரான் சிறை பிடித்தது. அது இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கப்பல் என்று கூறப்படுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கைப்பற்றப்பட்ட இந்த சரக்குக் கப்பலான எம்.எஸ்.சி ஏரீஸில் உள்ளே இருந்த அனைத்து குழுவினரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். உள்ளே மொத்தம் 17 இந்தியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஈரான் மோதலுக்கு நடுவே சிக்கிக் கொண்ட அவர்கள் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதற்கிடையே கப்பலில் இருக்கும் 17 இந்தியர்களைச் சந்திக்க விரைவில் ஈரான் அனுமதி அளிக்கும் என்று அந்நாட்டின் அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி கடத்தப்பட்ட இந்த கப்பல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
சிறை பிடிப்பு: அதில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே நின்ற அந்த கப்பல் மீது ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய ஈரான் படை அதைச் சிறை பிடிக்கும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இந்த கடத்தல் சம்பவம் நிலைமையை மேலும் மோசமானதாக மாற்றியது. அதிலும் உள்ளே இருப்பவர்கள் இந்தியர்கள் என்று தெரிந்ததும் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் முயற்சியிலும் மத்திய அரசு இறங்கியது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் தொலைப்பேசி மூலம் பேசினார். மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜெய்சங்கர் வலியுறுத்தி இருக்கிறார். தங்கள் நாட்டை பாதுகாத்துக் கொள்ளவே இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெய்சங்கர்: இந்த தொலைபேசி உரையாடல் போது வெளியுறுவ துறை அமைச்சர் ஜெய்சங்கர், எம்எஸ்சி ஏரீஸில் உள்ள 17 இந்தியர்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற ஜெய்சங்கர், இதில் ஈரான் உதவியை கோரி இருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், சிறை பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலின் நிலையை அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகக் கூறினார். மேலும், இந்திய அரசின் பிரதிநிதிகள் அந்த குழுவை விரைவில் சந்திக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
மோதல் காரணம் என்ன: சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அங்கிருந்த டாப் தளபதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இதை இஸ்ரேல் தான் நடத்தியதாக கூறி ஈரான் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications