எல்லையில் இந்திய வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர்.. ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் பதில்
டெல்லி: சீனப் படையினருடன் லடாக் எல்லையில் ஏற்பட்ட கைகலப்பில் கொல்லப்பட்ட இந்தியப் படையினர், மோதல் நடந்தபோது ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.
நமது ராணுவ வீரர்கள் ஏன் ஆயுதமில்லாமல் உயிர்த்தியாகம் செய்யும்படி அனுப்பப்பட்டார்கள்? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

இதற்கு ட்விட்டரில் இன்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெய்சங்கர்.
Let us get the facts straight.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 18, 2020
All troops on border duty always carry arms, especially when leaving post. Those at Galwan on 15 June did so. Long-standing practice (as per 1996 & 2005 agreements) not to use firearms during faceoffs. https://t.co/VrAq0LmADp
எல்லைப் பாதுகாப்பு பணியில் உள்ள எல்லாப் படையினரும் ஆயுதம் வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக சாவடியை விட்டு வெளியே செல்லும்போது அவர்களிடம் ஆயுதம் இருக்கும். ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கிலும் நமது ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன்தான் சென்றனர்.. இது போன்ற மோதல்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது நீண்ட கால நடைமுறை (1996, 2005 ஒப்பந்தங்களின் அடிப்படையில்)". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், நமது ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் இறந்ததாக இந்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு ராணுவ வீரர்களும் கட்டை, கல், மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications