இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதி தடை.. 91 நாடுகளை ஆபத்தில் தள்ளியுள்ளது.. சவுமியா சுவாமிநாதன் தகவல்
டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையால் 91 நாடுகள் உருமாறிய கொரோனா வகைகள் காரணமாக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகத் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் தடை காரணமாக சுமார் 91 நாடுகள் ஆபத்தில் தள்ளப்படலாம் உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

91 நாடுகள்
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், "இந்தியா தற்போது கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யத் தடை விதித்துள்ளது. குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, 91 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை, இந்தியாவின் தடையால் இந்த நாடுகளுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா
எனவே, இந்த நாடுகளில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய B.1.617.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இந்த வகை மட்டுமல்ல மற்ற நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளாலும் ஆபத்துதான். இந்த வகைகள் மிக விரைவாகப் பரவுகின்றன. இவற்றை நாம் கண்டறியும் முன்னரே, அவை பரவ தொடங்கி விடுகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட 117 வகையிலும் இதே நிலைதான்.

ஆப்பிரிக்க நாடுகள்
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள், துரதிர்ஷ்டவசமாக, தங்கள் மக்கள்தொகையில் 0.5 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளன. குறிப்பாகச் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் அவை தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி விநியோகத்தில் இதே நிலை தொடர்ந்தால், சில நாடுகள் வாழ்க்கையில் விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். சில நாடுகள் மிக மிக மோசமாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தடுப்பூசிகள்
இந்தியாவில் தடுப்பூசி கொள்முதல் மற்றும் ஆர்டர் செய்யும் முறை மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தியா போதியளவில் தடுப்பூசிகளை ஆர்டர் கொடுக்க தவறிவிட்டதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், நாட்டில் இருக்கும் மக்களுக்குத் தடுப்பூசிகளை முதலில் கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததையும் எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்,












Click it and Unblock the Notifications