அமெரிக்காவில் நுழைய முயற்சி? ஜமைக்காவுக்கு கூட்டமாக சென்ற இந்தியர்கள்.. திருப்பி அனுப்பி வைப்பு
டெல்லி: சமீப நாட்களாக அமெரிக்காவில் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் துபாயிலிருந்து ஜமைக்கா சென்ற இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
அமெரிக்கா என்பது வளர்ந்து வரும் நாட்டில் உள்ளவர்களுக்கு கனவு தேசமாக இருக்கிறது. அங்கு சென்று எந்த வேலையை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்கிற நோக்கத்துடன் பலரும் செல்ல முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அனைவருக்கும் விசா கிடைத்துவிடுவதில்லை. எனவே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல மக்கள் முயன்று வருகின்றனர். இதில் ஏராளமான ஆபத்துகள் இருக்கின்றன.

கடல் வழியாக போகும் போது ஒரே படகில் அளவுக்கு அதிகமானோர் செல்வதால் படகு விபத்தில் சிக்கி அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல, அமெரிக்க எல்லைகளில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு மற்றும் இரும்பு முள் வேலிகளில் சிக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதில் உயிரிழப்பை விட காயங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள ஜமைக்கா தீவுக்கு ஒரே நேரத்தில் 250 இந்தியர்கள் சென்றிருந்தது சலசலப்பை கிளப்பியிருந்தது.
அதாவது, இவர்கள் ஒரே விமானத்தில் ஜமைக்கா சென்றிருக்கின்றனர். இதில் சந்தேகமடைந்த ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அதாவது துபாயிலிருந்து இன்று ஜமைக்காவின் நார்மன் மேன்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சுமார் 253 இந்திய பயணிகள் இருந்திருக்கின்றனர். இந்த 253 பேரில் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான்.
இவ்வளவு எண்ணிக்கையில் இந்தியர்கள் இதற்கு முன்னர் இங்கு வந்தது கிடையாது என்று கூறிய ஜமைக்கா குடியுரிமை அதிகாரிகள் இந்திய பயணிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் ஜமைக்காவில் 5 நாட்கள் தங்க வந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய ஆவணங்களை பரிசோதித்து பார்த்ததில் ஒரே ஒரு நாள் மட்டுமே தங்குவதற்கான ஏற்பாட்டுடன் வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
எனவே அவர்களுக்கு ஜமைக்காகவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் விமான நிலையத்தின் அருகில் இருந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஏன் கூட்டமாக ஜமைக்காவுக்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும், ஜமைக்காவிலிருந்து நிகரகுவா சென்று அங்கிருந்து மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழையவே வந்திருந்தார்கள் என்று சில தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ளன. அதேநேரம், இது மனித கடத்தல் சம்பவமாக இருக்கலாம் என்கிற கோணத்திலும் ஜமைக்கா அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜமைக்கா சென்ற இந்தியர்கள் மீண்டும் துபாய்க்கு அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications