ஒரு மிஸ்ட் கால்! உடைந்து போன கெஜ்ரிவால்.. முதுகில் குத்திய எம்பிக்கள்.. ஆம் ஆத்மியில் என்ன நடந்தது
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்குக் கடந்த வாரம் மறக்கவே முடியாத ஒரு சம்பவம் நடந்தது. அக்கட்சியின் நாடாளுமன்ற முகமாகச் செயல்பட்ட ராகவ் சத்தா ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். அவர் விலகியது பெரிய விஷயம் இல்லை என்றாலும் அவருடன் மொத்தம் 6 எம்பிக்கள் விலகி கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வளவு எளிதில் பதற்றமடையக்கூடியவர் அல்ல. சிறைவாசம், மதுபான ஊழல் வழக்கு, கட்சிக்குள் பிளவு என எத்தனையோ புயல்களைக் கடந்தவர். ஆனால், ஏப்ரல் 22ம் தேதி புதன்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வந்த அந்தச் செய்தி, கெஜ்ரிவாலை ஒரு நொடி அதிர வைத்தது என்பதே உண்மை. அப்போது அவசரம் அவசரமாக அவர் தனது எம்.பி-க்களுக்குப் போன் செய்தார்.

மிஸ்ட் கால்
சிலர் எடுத்தார்கள், சிலர் எடுக்கவில்லை. எடுத்தவர்கள் பேசியதை விட மௌனமே அதிகமாக இருந்தது. இதனால் குழப்பத்திலேயே கெஜ்ரிவால் அன்றைய தினத்தைக் கழித்தார். புதன்கிழமை இருந்த சந்தேகம், வியாழக்கிழமை உறுதியானது. ஆம் ஆத்மியின் 10 மாநிலங்களவை எம்பிக்களில் 7 பேர் 'அவுட்'. இது ஏதோ அவசர கதியில் நடந்த சம்பவம் இல்லை.. மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மாஸ்டர் பிளான்.
உண்மையில் இந்த ஆபரேஷன் ஏப்ரல் 27 திங்கள்கிழமை தான் நடக்க வேண்டியது. மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த உள்துறை அமைச்சர் டெல்லி திரும்பியதும், அவர் முன்னிலையில் 7 எம்பிக்களும் பாஜகவில் இணைவதாகத் திட்டம். ஆனால், கெஜ்ரிவாலுக்கு எப்படியோ இந்த விஷயம் கசிந்துவிட்டது. தனது எம்பிக்களை தடுக்கவே அவர் போன் மேல் போன் போட்டுள்ளார். எனவே காத்திருந்தால் நிலைமை மாறிவிடும் என்பதை உணர்ந்த பாஜக இந்த ஆபரேஷனை முன்கூட்டியே நடத்தியுள்ளது. "திங்கள் வரை காத்திருக்க வேண்டாம், இப்போதே முடிப்போம்" என மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவே, வெள்ளிக்கிழமையே எல்லாம் ஓவர்!
ராகவ் சத்தா
இந்த ஆபரேஷனின் பீல்டு கமாண்டர் ராகவ் சத்தா தான் என்பதுதான் அக்மார்க் அதிர்ச்சி. மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை நெருங்கியபோது, லண்டன் சென்ற ராகவ் சத்தா அங்கேயே தங்கிவிட்டார். 'கண் அறுவை சிகிச்சை' எனச் சொல்லப்பட்டாலும், அது ஒரு அரசியல் ரீ-கலிபரேஷன் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். டெல்லி திரும்பிய ராகவ் சத்தா, பழையபடி மோடிக்கு எதிராகக் கர்ஜிக்கவில்லை. மாறாக, மற்ற 6 எம்பிக்களையும் பாஜக பக்கம் இழுக்கும் பாலமாகச் செயல்பட்டார்.
இதில் கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்பஜன் சிங் விலகியது பெரிய ஆச்சரியமல்ல. பிசிசிஐயில் வந்த ஒரு போன் காலே அவரை பாஜக பக்கம் திருப்பியதாகச் சொல்லப்படுகிறது. கட்சித் தலைமையை விட, கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவுக்கே அவர் முக்கியத்துவம் கொடுத்தார். ஏப்ரல் 24ல் அவர் கையெழுத்திட்டது வெறும் சடங்கு மட்டுமே.. அவர் மனதளவில் எப்போதோ ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறிவிட்டார்.
தொழிலதிபர்கள்
ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி ஆதாரமாக இருந்த தொழிலதிபர்களான ராஜேந்தர் குப்தா , விக்ரம்ஜித் சாஹ்னி மற்றும் அசோக் மிட்டல் ஆகிய மூவருமே பாஜகவின் பி டீமாகவே செயல்பட்டு வந்தனர். குறிப்பாக, ஏப்ரல் 15ல் அசோக் மிட்டல் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு, அவரை பாஜக பக்கம் தள்ளியது. இவர்கள் யாருமே அடிமட்டத் தொண்டர்கள் கிடையாது.. தங்களின் தொழிலைக் காப்பாற்றிக் கொள்ளக் கட்சி பக்கம் சாய்ந்த பிராண்ட் அம்பாசிடர்கள் மட்டுமே. இப்போது அவர்கள் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறியுள்ளனர். அவ்வளவு தான்.
இவர்களை விட கெஜ்ரிவாலை நிஜமாகவே உடைத்தது சந்தீப் பாதக்கின் துரோகம்தான். 2022 பஞ்சாப் தேர்தலில் 92 இடங்களை ஆம் ஆத்மி அள்ளிக் குவிக்க மூளையாகச் செயல்பட்டவர் இவர் தான். ஆனால், டெல்லி தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் இவர் ஓரம் கட்டப்பட்டார். வெள்ளிக்கிழமை காலை வரை கெஜ்ரிவாலிடம் "நான் உங்களுடன்தான் இருக்கிறேன்" எனப் போனில் உறுதி கொடுத்த பாதக், 11 மணிக்கு பாஜக அலுவலகத்தில் ராகவ் சதாவுடன் நின்றார். அந்தத் தருணம், கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத கறுப்புப் பக்கம்.
பஞ்சாப் திட்டம்
7 எம்பிக்கள் போனதால் பஞ்சாபில் பாஜகவுக்குப் பெரிய ஓட்டு வங்கி கிடைத்துவிடாது. ஆனால், நாடாளுமன்ற மேலவையில் பாஜகவின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது. இது முக்கியமான மசோதாக்களில் பாஜகவுக்கு கை கொடுக்கும். பஞ்சாபில் அடுத்தாண்டு தான் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான ஆட்டத்தை பாஜக இப்போதே தொடங்கிவிட்டது. ஆம் ஆத்மி சிதறுமா அல்லது மீண்டெழுமா என்பதே இப்போது அனைவரது கேள்வியாக இருக்கிறது.














Click it and Unblock the Notifications