TRP-க்காக போரை வைத்து பீதி செய்த நியூஸ் சேனல்கள்.. "பெரிய ஆப்பு" வைத்த மத்திய அரசு
டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் மக்களை அச்சமடைய செய்யும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டி அடுத்த 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் உள்ள செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் நிறுத்தம் செய்யப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் போர் புரிந்து வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் சப்ளை செய்யப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. மீறி இந்த பாதையில் வர்த்தக கப்பல்கள் நுழைந்தால் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி கியாஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ''இஸ்ரேல் - ஈரான் போர் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே சில தொலைக்காட்சி சேனல்களில் தேவையில்லாத பரபரப்பை கிளப்பும் மற்றும் யூகத்தின் அடிப்படையிலான செய்திகள் வெளியிடுவதை அமைச்சகம் கவனித்துள்ளது.
இது பொதுமக்களிடையே குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடும். இதனால் பொது நலனுக்காக செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான டிஆர்பி மதிப்பீடு 4 வாரங்கள் அல்லது அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க BARC-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஆர்பி (TRP - Television Rating Point) என்பது ஒவ்வொரு சேனல்களுக்கும் மிகவும் முக்கியம். இது செய்தி சேனல்கள் முதல் பிற வகையான அனைத்து சேனல்களுக்கும் முக்கியமான ஒன்றாகும். இந்த டிஆர்பி-யை மையப்படுத்தி தான் அந்த சேனல்களுக்கு விளம்பரங்கள் வழங்கும். இந்த டிஆர்பியை BARC (Broadcast Audience Research Council) எனும் 'ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி குழு' கணக்கிட்டு வழங்கி வருகிறது.
இந்த அமைப்பு சார்பில் குறிப்பிட்ட வீடுகளில் 'பீப்பிள் மீட்டர்ஸ்' (People Meters) பொருத்தப்ட்டு எந்த சேனலில் எந்த நிகழ்ச்சி அதிக நேரம் பார்க்க்பபடுகிறது என்ற டேட்டா சேகரிக்கப்பட்டு வாரந்தோறும் டிஆர்பி ரேட்டிங் வெளியாகும்.
டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடங்களை பிடிக்கும் சேனல்களுக்கு தான் மக்கள் மனதை கவர்வதாக அர்த்தம். இந்த நிலையில் தான் BARC சார்பில் அடுத்த 4 வாரம் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கை நிறுத்தி வைக்க மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications