மருத்துவ அதிசயம்.. செயற்கை இதயத்துடன் வாழ்பவருக்கு 18 மாதங்களுக்கு பிறகு துடித்த சொந்த இதயம்
டெல்லி: செயற்கை இதயம் மூலம் வாழ்ந்து வந்த ஈரான் தொழிலதிபருக்கு அவரது செயல் இழந்த இதயம் 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பழைய படி துடித்து வருவது மருத்துவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அதிசயமாக இந்த நிகழ்வை மருத்துவர்கள் வர்ணிக்கிறார்கள்.
ஈரானைச் சேர்ந்த தொழிலதிபர் ஹனி ஜாவத் முகமது. 52 வயதாகும் இவருக்கு கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இதய செயல் இழப்பு பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது இந்தியாவுக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட ஜாவத், டெல்லியில் உள்ள பிஎல்கே இதய சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது இதய தசைகள் ரத்தத்தை பம்பிங் செய்யும் நிலையில் இல்லை. இதனால் அவருக்கு உடனே இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவருக்கு இதயம் தானமாக கிடைக்காததால் செயற்கை இதயம் பொருத்தினர். அதே நேரம் செயல்படாத இதயத்தை அப்படியே ஓய்வில் வைத்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தெடர்ந்து ஹனி ஜாவத் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது செயற்கை இதயத்தையும், செயல்படாத இதயத்தையும் மருத்துவர்கள் தொடர்நது கண்காணித்து வந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து 18 மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜாவத்தின் இதயத்தை மருத்துவர்கள் சோதித்தனர். இதில் செயல்படாமல் இருந்த அவரது ஒரிஜினல் இதயம் இயல்பாக துடிப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதனை மருத்துவ அதிசயம் என வியப்படைந்த மருத்துவர்கள் கடந்த 2 மாதத்தில் ஜாவத்தின் செயற்கை இதய செயல்பாட்டை படிப்படியாக குறைந்தனர். இப்போதுஅவரது ஒரிஜினல் இதயம் இயல்பாக முழு அளவில் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் அஜய் கவுல் கூறுகையில், வழக்கமாக செயல் இழந்த இதயம் மீண்டும் செயல்படுவது என்பது 10 முதல் 15 சதவீதம் தான் சாத்தியம் என்றும் முழு அளவில் செயல்படுவது என்பது மருத்துவ அதிசயம் என்றும், இதன் மூலம் ஜாவத் மறுவாழ்வு பெற்றுவிட்டார் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.