சிபிஐ விசாரணைக்கு ஓகே சொன்ன சுப்ரீம் கோர்ட்! அருணா ஜெகதீசன் விசாரணை தொடருமா? வில்சன் அப்டேட்
டெல்லி: "இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு, இடைக்கால தீர்ப்புதான். எனவே உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடரும்" என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கூறியிருக்கிறார்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்திருந்தது.

அதேபோல, வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு விசாரணை குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது. இதனையடுத்து புலனாய்வு குழுவையும் தமிழக அரசு அமைத்திருந்தது. ஆனால், இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் தவெக வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இன்று இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பை வழங்கியிருந்தது. அதில், கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வில்சன், "இது இடைக்கால தீர்ப்பு மட்டுமே. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். இறுதி தீர்ப்பில், சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொன்னால் இடைக்கால உத்தரவு ரத்தாகும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications