இந்தி போல தமிழ் படித்தே ஆகனும்னு சொன்னா வடமாநில மாணவர்கள் தெற்கே வர முடியுமா?கேரளா எம்பி பொளேர் போடு
டெல்லி: இந்தி மொழியைப் போல தமிழ், மலையாளம், கன்னடத்தில் பாடங்களைப் படித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தினால் வட இந்திய மாணவர்கள் தென்மாநிலங்களுக்கு வரவே முடியாது என கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ் ராஜ்யசபாவில் சுட்டிக்காட்டினார். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக ராஜ்யசபாவில் பேசுகையில் ஜான் பிரிட்டாஸ் இதனைத் தெரிவித்தார்.

ஆட்சி மொழி தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையானது இந்தி மொழி திணிப்புக்கு பரிந்துரைகளை வழங்கி இருந்தது. நாடு முழுவதும் இது பெரும் சர்ச்சையானது. குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்கள் இந்த பரிந்துரைகளை கடுமையாக எதிர்த்தன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இப்பரிந்துரைகளைக் கண்டித்து மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதி இருந்தனர்.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் ஜான் பிரிட்டாஸ் எம்பி பேசியதாவது: நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இந்தியை திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவானது பரிந்துரைகள் வழங்கியது. அதில் இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐஐடியில் படித்த சுந்தர் பிச்சை, இந்தியில் தேர்வு எழுதியிருந்தால் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்க முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? தென்னிந்தியாவில் வட இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இன்று படித்துக் கொண்டிருக்கின்றனர். வட இந்திய மாணவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம் அல்லது கன்னடத்தில்தான் பாடங்களைப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படி கட்டாயப்படுத்தினால் வட இந்திய மாணவர்கள் தென்னிந்தியாவுக்கு வர முடியாது..வட இந்தியாவுக்குதான் திரும்பி செல்ல வேண்டும். இந்தி மொழியைத் திணிக்கிற எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் கூறியிருந்தார்.
அத்துடன் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது பேச்சை தமிழில் பதிவிட்டிருந்தார் ஜான் பிரிட்டார்ஸ். அந்த ட்விட்டர் பதிவில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா? என பதிவிட்டிருந்தார். ஜான் பிரிட்டாஸின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் எண்ணிக்கையில் பகிரப்பட்டிருந்தது.

இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று மேற்கோள்காட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அப்பதிவில், தாய்மொழி எமது பிறப்புரிமை.பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும்.75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல்.வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும்.ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்.திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும். இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! Sorry உங்களுக்குப் புரிவதற்காக "ஜாக்த்தே ரஹோ" என சுட்டிக்காட்டி கிண்டலடித்திருந்தார்.












Click it and Unblock the Notifications