கொல்கத்தா மாணவி பலாத்கார வழக்கு- குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க மே.வங்க அரசு அப்பீல்
டெல்லி: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் மாணவி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்ற கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நாட்டையே கொந்தளிக்க வைத்த கொல்கத்தா மாணவி கொடூர பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில், தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தி மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே கொந்தளிக்க வைத்தது. கொல்கத்தா மாணவியை படுகொலை செய்த சஞ்சய் ராய் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் தன்னார்வலராகப் பணிபுரிந்தவர் சஞ்சய் ராய். அம்மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சஞ்சய் ராய் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில் மேற்கு வங்க போலீசார் இந்த வழக்கில் மெத்தனமாக நடந்து கொள்வதாகவும் தாமதமாகப் புகாரை பதிவு செய்ததாகவும் சர்ச்சைகள் வெடித்தன.
இதனால் கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதி கேட்டும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் அல்ல நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தடுமாறினார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட்டது.
இந்த நிலையில் கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு கீழ்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளி சஞ்சய் ராய்க்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications