லோக்சபா தேர்தலில் தோற்ற பின்.. பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார்! லாலு பிரசாத் யாதவ் பேச்சு
டெல்லி: அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டிற்குச் சென்றுவிடுவார் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடக்கும் நிலையில், தேர்தல் பணிகளை இப்போதே பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டுள்ளன.

பல்வேறு எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வோம் என்றும் பாஜகவை வீழ்த்துவதே தங்கள் நோக்கம் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் சாடல்: அதேநேரம் இந்த எதிர்க்கட்சி கூட்டணியை பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சித்தே பேசி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா" கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களுக்கு குடும்பமே முக்கியம் என்றும் அவர்களுக்கு நாட்டு மக்களின் வளர்ச்சி மீது அக்கறை இல்லை என்றும் சாடினர். மேலும், எதிர்க்கட்சி கூட்டணியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வெள்ளையனே வெளியேறு கோஷத்தையும் (Quit India) அவர் முன்வைத்தார்.
வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவார்: இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பிரதமர் மோடி வெளிநாட்டிற்குச் சென்றுவிடுவார் என்றும் எந்த நாட்டிற்குச் செல்லலாம் என்பதே மோடிக்கு இப்போது கவலையாக உள்ளதாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் மோடி "Quit India" என்றார். ஆனால், பிரதமர் மோடி தான் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டு உள்ளார். இதன் காரணமாகவே அவர் இப்போது பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறார்.. பீட்சாவை சாப்பிட்டுக் கொண்டு எங்கு காலாற நடக்க முடியும் என்ற இடத்தை பிரதமர் மோடி தேடி வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது பேச்சில் எப்போதும் இப்படி தான் காமெடி கலந்தே இருக்கும். லாலு பிரசாத் யாதவிற்கு சமீபத்தில் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்த்தே வந்தார். இதற்கிடையே தனது மூத்த மகனும் பீகார் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட போதே இந்த கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்: தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் நானும் கலந்து கொள்ள இருக்கிறேன். இந்தக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சரான நிதிஷ் குமாருடன் கலந்து கொள்ள இருக்கிறேன்..
நாம் ஒற்றுமையை அப்படியே வைத்திருக்க வேண்டும் மற்றும் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும். இதுவே எங்கள் கூட்டணியின் நோக்கமாகும். அடுத்து வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கு மத்திய அரசே முழுமையாகக் காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications