உங்கள் அனுபவம் எங்களை வழிநடத்தும்! வெங்கையா நாயுடு பிரிவு உபசரிப்பு.. ராஜ்யசபாவில் மோடி நெகிழ்ச்சி
டெல்லி; வரும் 10 தேதியுடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஓய்வு பெற உள்ள நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக 73 வயதான வெங்கையா நாயுடு கடந்த 2017லிருந்து இந்த பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவரது பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "நமது குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு இந்த அவையிலிருந்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த அவையின் வரலாற்று தருணங்கள் அவரது அழகான இருப்புடன் தொடர்புடையவை" என பிரதமர் நெகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், சபாநாயகர் மற்றும் பிரதமர் அனைவரும் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் நாம் அனைவரும் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால், இந்த முறை அத்தகைய தனி சிறப்பு வாய்ந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த சபையை (மாநிலங்களவையை) வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நீங்கள் தற்போது ஓய்வு பெறலாம். ஆனால் இந்த நாடு மற்றும் நாட்டுக்காக பொதுவாழ்வில் பணியாற்றும் எங்களைப்போன்றோர்களை உங்கள் அனுபவங்கள் வழிநடத்தும். அதிலிருந்து நாங்கள் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். நீங்கள் ஏற்கெனவே கூறியது போன்றதுதான் இது. அதாவது, நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள், 'நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். பொது வாழ்விலிருந்து அல்ல' என அதைபோலதான் இந்த அனுபவ பாடங்களும்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் வரும் 11ம் தேதி பொறுப்பேற்றுக்கொள்கிறார். இதனையடுத்து மொஹரம் மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைகளையொட்டி நாடாளுமன்றத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே இன்று வெங்கையா நாயுடுவுக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது. வெங்கையா நாயுடு 13வது குடியரசுத் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவருக்கான பிரிவு உபசார விழா இன்று மாலை ஜிஎம்சி பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.
இந்த பிரிவு உபசார விழாவில், பிரதமர் மோடி வெங்கையா நாயுடுவுக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்குவார். மேலும், இவர் ராஜ்யசபா தலைவராக இருந்த காலத்தை விவரிக்கும் ஒரு பிரசுரமும் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து இரவு விருந்து நடைபெறும். முன்னதாக புதிய குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள தன்கர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் வரை கலந்துரையாடினார். பின்னர் வெங்கையா நாயுடு தன்கரை தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications