'2 அடி நடந்தா கேலரிக்கு போயிடலாம்".. லோக்சபாவில் அரட்டை அடித்த எம்பிக்களிடம் சபாநாயகர் டென்சன்
டெல்லி: லோக்சபாவில் நேற்று விவாதத்தின் போது சில உறுப்பினர்கள் அருகில் இருக்கும் உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த சபாநாயகர் ஓம பிர்லா இப்படி எல்லாம் அவையில் அரட்டை அடிக்கக்கூடாது என உறுப்பினர்களை கோபமாக கண்டித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர் 17வது லோக்சபாவின் சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா நியமிக்கப்பட்டார். தற்போது நடந்துவரும் 17வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரை ஓம் பிர்லா நடத்தி வருகிறார்.

அவையில் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் என அனைவருக்குமே கேள்விகள் எழுப்ப சம வாய்ப்பு வழங்கி வருவதாக அவரை எதிர்க்கட்சி எம்பிக்களும், ஆளும் கட்சி எம்பிக்களும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக அவையில் ஒவ்வொரு நாள் விவாதங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில் லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் உறுப்பினர்கள் மாறி மாறி தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கோபத்தில் கண்டித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "அவை நடந்து கொண்டிருக்கும் போது சில உறுப்பினர்கள் அருகில் இருப்பவர்களிடம் இருக்கையில் அமர்ந்து கொண்டும், நின்றபடியும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
இது உங்கள் அவை. இப்படித்தான் அவையை நடத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? இது சரியா? இதுபோன்ற பழக்கங்களை இனிஅனுமதிக்க முடியாது. அரட்டை அடிக்க விரும்பினால், 2 அடி தள்ளிப்போனால் கேலரி வரும். அங்கு போய் உங்களுக்குள் பேசிக் கொண்டிருங்கள்" என கோபமாக பேசினார். இதன் பின்னர் அவரவர் இருக்கையில் உறுப்பினர்கள் அமர்ந்து விவாதத்தை கவனித்தனர்.












Click it and Unblock the Notifications